Load Image
Advertisement

நீலகிரியில் மேலும் 3 புலிக்குட்டிகள் இறப்பு தாய்ப்புலியை தேட நான்கு குழுக்கள் அமைப்பு

 3 more tiger cubs die in Nilgiris Four teams set up to search for tigress    நீலகிரியில் மேலும் 3 புலிக்குட்டிகள் இறப்பு தாய்ப்புலியை தேட நான்கு குழுக்கள் அமைப்பு
ADVERTISEMENT
ஊட்டி,:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நேற்று முன்தினம் ஒரு புலிக்குட்டி உடல் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் மூன்று புலி குட்டிகள் இறந்ததால், வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இவை அனைத்தும் இரண்டு மாத புலிக்குட்டிகள் என்பதும், தாய்ப்பால் இன்றி இறந்ததும் தெரியவந்துள்ளதால், தாய்ப் புலியை தேட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம். ஆனால், இரு மாதங்களில், மாவட்டத்தில், 10 புலிகள் இறந்திருப்பது, வனத்துறையை மட்டுமல்லாது, வன விலங்கு உயிரின ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி வடக்கு மற்றும் சீகூர் வனச்சரக எல்லையில், சின்ன குன்னுார் வனப்பகுதியில், நேற்று முன்தினம் ஒரு புலிக்குட்டி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் நடத்திய தொடர் ஆய்வில், நேற்று மேலும் இரண்டு புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது தெரியவர, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில், வன அலுவலர் கவுதம், முதுமலை வெளிவட்ட பகுதி உதவி இயக்குனர் அருண் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்த பின், அதே பகுதியில் இரண்டு புலி குட்டிகளின் உடல்கள் எரியூட்டப்பட்டன.

தொடர் தேடுதலில், அப்பகுதியில் ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் இருப்பது தெரிந்து, அதை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை அளித்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அந்த புலிக்குட்டியும் இறந்தது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''வனப்பகுதியில் தொடர்ந்து நான்கு புலிக் குட்டிகள் இறந்திருப்பதன் காரணம் குறித்து ஆராயப்படும். தாய்ப்புலியின் நடமாட்டம் குறித்து கண்டறிய, நான்கு குழுக்கள் அமைத்து தேடுதல் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

தாய்ப்பால் இன்றி இறப்பு?

கோத்தகிரி 'லாங்வுட்' சோலை பாதுகாப்பு குழு செயலர் ராஜூ கூறுகையில், ''ஒரு புலி வாழ்வதற்கு, 50 சதுர கி.மீ., காடு தேவை. பல்லுயிர் சூழல் விலங்கான புலி வாழும் இடத்தில், அனைத்து விலங்குகளும், தாவரங்களும் செழித்து வாழும். நீலகிரியில் புலிகளின் தொடர் இறப்பு வருத்தம் அளிக்கிறது.

குறிப்பாக, சீகூர் வனச்சரகத்தில், ஒரு மாதத்தில், ஐந்து புலிக் குட்டிகள் தாய்பால் இல்லாமல் இறந்துள்ளன. அப்படி எனில், தாய்ப்புலி எங்கே சென்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப உதவியுடன், இங்கு வாழும் தேசிய விலங்கின் பாதுகாப்பை, புலிகள் பாதுகாப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement