கடலோரங்களில் பாதுகாப்பு குளறுபடி 1,076 கி.மீ.,க்கு போலீசார் ஆய்வு
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன், பாக்., உளவாளியான அருண் செல்வராசன் சிக்கினார். இலங்கையை சேர்ந்த இவர், சாலிகிராமத்தில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
கூடுதல் கவனம்
இதன் வாயிலாக, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், துறைமுகங்கள், அமெரிக்க துணை துாதரகம் மற்றும் கடலோர பகுதிகள், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட படங்களை எடுத்து, பாக்., துாதரக அதிகாரிகளுக்கு அனுப்பினார்.
இவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள மிக முக்கியமான ஹிந்து கோவில்கள், கடல் வழி மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாக உள்ள பகுதிகள் குறித்த படங்களை எடுத்து இருந்தனர்.
இதையடுத்து, பாக்., உளவாளிகள் படம் பிடித்த கடலோர பகுதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
உத்தரவு
தற்போது, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சென்னை - ராமேஸ்வரம் வரை பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்கள் எவை என, ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணியில், கடற்காவல் போலீசார், 450க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு, 1,076 கி.மீட்டர் தொலைவிற்கு ஆய்வு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்தும் ஆய்வு பணிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட தலைப்புகள் தரப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் ஆய்வு நடக்கிறது.
பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களில், கூடுதல் ரோந்து பணி, ரகசிய கண்காணிப்பு, சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தல் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!