புது பஸ்களில் கதவுகள் கட்டாயம் மாநகர போக்குவரத்து கழகம் முடிவு
சென்னை, 'பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இனி வரும் புதிய மாநகர பேருந்துகளில் கதவு கட்டாயமாக இருக்கும்' என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், பேருந்தின் படிகளில் தொங்கியபடி ஆட்டம் ஆடி, பாடல்கள் பாடிச் செல்கின்றனர்.
குறிப்பாக '23சி, 12பி, 18கே, 57, 44, 33சி, 102, 15, 2ஏ' உள்ளிட்ட மாநகர பேருந்துகளின் ஜன்னல்களில் தொங்கியும், சிலர் பேருந்துகளின் கூரையிலும் ஏறி, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
சில நேரங்களில், தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மாணவர்களின் சாகச செயல்கள், பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின. மாணவர்களை தட்டிக் கேட்கும் ஓட்டுனர், நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை மாணவர்கள் தாக்குவதும் தொடர்கிறது.
இந்நிலையில், சென்னையில் இனி வரும் அனைத்து புதிய மாநகர பேருந்துகளிலும், கதவுகள் கட்டாயமாக பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலின் போது பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பயணியர் சிலரும் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். பேருந்துகளில் கதவுகளை பொருத்தும் போது, படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும்.
எனவே, சென்னையில் இனி வரும் அனைத்து புதிய மாநகர பேருந்துகளிலும், கதவுகள் கட்டாயமாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளோம்.
படிப்படியாக, அடுத்த சில ஆண்டுகளில், அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் வசதி இருக்கும். இதன் வாயிலாக படிக்கட்டு பயணம் தவிர்க்கப்படுவதோடு, விபத்துகளையும் குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!