இரவு நேர பஸ்களின்றி பயணிகள் தவிப்பு
கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு, முழு அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி மாணவ மாணவியர் பாதிக்கப்படுவதாக, அடிக்கடி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
மேலும், கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரத்தில் அரசு பஸ் சேவை போதிய அளவில் இல்லை. இதனால், பயணிகள் தவிக்கும் நிலை தொடர்கிறது.
அந்த வகையில், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர் தினமும் கடலுார், புதுச்சேரி பகுதிகளில் வேலைக்கு செல்கின்றனர்.
இவர்கள் பணி முடிந்து இரவில் வீடு திரும்ப படாத பாடுபடுகின்றனர். இரவு நேரங்களில் கடலுார் தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தத்தில், நீண்ட நேரம் வரையில் காத்து கிடக்கின்றனர். வழக்கமாக வரும் பஸ்களை நம்ப முடியவில்லை என்கின்றனர்.
இரவு 10:40 மணிக்கு பாரதி சாலை வழியாக இயக்கப்படும் சேலம், ஈரோடு அரசு பஸ்கள் கடந்த சில மாதங்களாக ஜவான்ஸ் பவன்-கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பு வழியாக சென்று விடுகிறது. அடுத்து வரும், விழுப்புரம் அரசு பஸ்சில் பயணித்தனர். இந்த பஸ்சும் சில நேரங்களில் சரியாக இயக்குவதில்லை
பஸ் வருமா; வராதா என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
வேறு வழியின்றி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில், பயணிகளின் தவிப்பு தொடர்கிறது. விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பயணிகளின் பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!