Load Image
Advertisement

திருமூர்த்தியில் இன்று நீர் திறப்பால் நிம்மதி; பி.ஏ.பி.,- ஏழு குளம் பாசனம் பயன்பெறும்

உடுமலை:பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94,069 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது.

பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூன்றாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றதும், காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகள் மற்றும் பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு பெருமளவு குறைந்தது. இதனால், ஆக.,மாதம், 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பதும், 5 சுற்றுக்கள் நீர் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பை பொருத்து, 4ம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று நீர் வழங்க, திட்ட குழு மற்றும் பாசன சபை நிர்வாகிகள், அதிகாரிகள் முடிவு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி, கடந்த, 20 நாட்களாக நடக்கிறது.

இதனையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு ஒரு சுற்று நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், 'திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை, 4ம் மண்டல பாசனத்துக்கு உட்பட்ட, 94 ஆயிரத்து, 69 ஏக்கர் நிலங்களில், நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், 20ம் தேதி (இன்று) முதல், அக்., 11ம் தேதி வரை, 21 நாட்களுக்குள், ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கு ஏற்ப நீர் திறந்து விட அனுமதியளிக்கப்படுகிறது,' என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட உள்ளது.

அதேபோல், ஏழு குளம் பாசனத்துக்கும், இன்று முதல், டிச.,மாதம் வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ''பி.ஏ.பி., பாலாறு படுகை பழைய ஆயக்கட்டு பாசனம், தளி வாய்க்கால் பாசனத்திற்குபட்ட, 2,786 ஏக்கருக்கு, 20ம் தேதி (இன்று) முதல் வரும், டிச.,31 வரை, ஒரு நிரப்புக்கு, மொத்தம், 250 மில்லியன் கனஅடி நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விட அனுமதியளிக்கப்படுகிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement