Load Image
Advertisement

உணவு பொருட்களில் அதிகரிக்கும் நிறமிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி;உணவுப் பொருட்களில் நிறமிகள் சேர்க்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதுகுறித்த ஆய்வை, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களையும், நடைபாதை கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, காளான் உள்ளிட்ட உணவுகளையும், இன்று அதிகம் பேர் விரும்பி உண்கின்றனர்.

ஆனால், இந்த உணவுகளின் தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்க கண்ணை பறிக்கும் நிறங்கள் சேர்க்கப்படுகின்றன.

இவற்றின் பின்னே இருக்கும் அபாயத்தை யாரும் உணர்வதில்லை. இவ்வாறு நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது பல்வேறு நோய்கள் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், சுவைக்கு அடிமையான நாக்கு இதையெல்லாம் யோசிக்கவிடுவதில்லை.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால், பாதிப்பு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''உணவுப்பொருட்களில் தீங்கு விளைவிக்கும் நிறமிகள் சேர்க்கக்கூடாது. இது, தடை செய்யப்பட்ட ஒன்று. கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றில், 100 பி.பி.எம்.,க்கு குறைவாக நிறமிகள் பயன்படுத்தலாம். இதற்கு அதிகமாக சேர்க்கப்படும் நிறமிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

தொடர்ந்து இந்த உணவுகளை உட்கொள்ளும் போது புற்றுநோய் ஏற்படும். மேலும், அல்சர், செரிமான கோளாறு உள்ளிட்ட வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படும். உணவுகளில் நிறமிகள் சேர்க்கப்படுவதை கட்டுப்படுத்த விரைவில் ஆய்வு நடத்தி, நோட்டீஸ் வழங்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement