Load Image
Advertisement

கிரைம்: முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்தறுத்து கொலை

Crime: Wife who concealed first marriage strangled to death   கிரைம்: முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்தறுத்து கொலை
ADVERTISEMENT
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆமோஸ், 32. இவரது மனைவி சாரம்மாள், 26. இரு மகன்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், இருவரும் பிரிந்தனர். சாரம்மாள் குழந்தைகளுடன், அம்பத்துாரில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், ஆவடி நந்தவன மேட்டூரைச் சேர்ந்த, அம்பத்துார் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் ஜான்சன், 29, என்பவருடன், சாரம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஆவடி, ஜீவா நகர், சின்னம்மன் கோவில் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.

சாரம்மாள் முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டது, ஜான்சனுக்கு தெரிந்தது. இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல் கடந்த 16ம் தேதி, தகராறு ஏற்பட்ட போது, ஜான்சன் கத்தியால் சாரம்மாள் கழுத்தில் குத்தி கொலை செய்து, கோணி பையில் கட்டி மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து இரண்டு நாள் கழித்து, நேற்று மாலை ஆவடி போலீசில் ஜான்சன் சரணடைந்தார். போலீசார், சாரம்மாள் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

பலாத்காரம் செய்து பெண் கொடூர கொலை



அவிநாசி: திருப்பூர், அவிநாசி, மங்கலம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் மழை நீர் வடிகால் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக, அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், சில நாட்களாக மங்கலம் ரோட்டில், சுற்றித்திரிந்த ஆதரவற்ற பெண் என, தெரிந்தது. அருகிலிருந்த கடைகளின், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அண்ணியை கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலை



சேலம், அன்னதானப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 48; அஸ்தம்பட்டியில் சலுான் வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி, 40; சேலம் மாவட்ட பா.ஜ., மகளிரணி செயற்குழு உறுப்பினர். உள்ளாட்சி தேர்தலில், 49வது வார்டில் போட்டியிட்டார். கண்ணனின் தம்பி கருணாநிதி, 45; அண்ணன் சலுானில் பணிபுரிகிறார். இவரது மகள் ராஜேஸ்வரி, 19, அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார். கடந்த, 13ல், காதலனை திருமணம் செய்து, அஸ்தம்பட்டி போலீசில் தஞ்சமடைந்தார்.

இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்திய போலீசார், ராஜேஸ்வரி விருப்பப்படி, கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கண்ணன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு கணவனுடன் ராஜேஸ்வரி வந்தார். இதையறிந்த கருணாநிதி அங்கு சென்று, மகளின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக, அண்ணி சாந்தியிடம் வாக்குவாதம் செய்தார்.

தகராறு முற்றிய நிலையில், கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி, மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். தலைமறைவான கருணாநிதியை, அன்னதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபரை கொன்றவர் கைது; 13 பேர் மீது வழக்கு பதிவு



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, குமாரக்குறிச்சி ஹரிஷ், 25, நண்பர் அபிபாலன், 21, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் கம்பி, பீர் பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில், ஹரிஷ் முகம் சிதைந்த நிலையில் பலியானார். அபிபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டாண்டுகளுக்கு முன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, டவுன் போலீசார் கீழப்பெருங்கரை பாலமுருகன், 22, என்பவரை கைது செய்தனர். மேலும், 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

'ஷவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி பலி



நாமக்கல்லில் உள்ள ஒரு ஹோட்டலில், 'ஷவர்மா' வாங்கி சாப்பிட்ட, 14 வயது பள்ளி மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக இறந்தார். மேலும், ஹோட்டலில் பிறந்த நாள் கொண்டாடிய மருத்துவ கல்லுாரி மாணவியர் உட்பட, 43 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடு புகுந்து ரூ.50 லட்சம், 50 சவரன் திருட்டு



அம்பத்துார், ஞானமூர்த்தி நகர், விட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 41. இவர், அம்பத்துாரில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில், மதுக்கூடம் நடத்தி வந்தார். இந்த நிலையில், உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக, தன் குடும்பத்தினருடன் 16ம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 50 லட்சம் ரூபாய், 50 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைகடிகாரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் குளிப்பதை 'வீடியோ' எடுத்த இருவர் கைது



கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண், உறவினர் திருமணத்திற்காக, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் தங்கிருந்தார். அவர், நேற்று முன்தினம் மண்டபத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக, இருவர் மொபைல் போனில் 'வீடியோ' எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பெண் சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள், இருவரை மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், ராணிப்பேட்டையை சேர்ந்த, பச்சையப்பன், 20, மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் மண்டபத்தில் சமையல் வேலைக்கு உதவியாளராக இருந்து வந்தது தெரிந்தது.இருவரும், பெண்கள் குளிப்பதை மொபைல் போனில் 'வீடியோ'வாக எடுத்திருப்பது உறுதியானது. இதையடுத்து, இவர்களிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, பச்சையப்பனை சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

ரூ.3,800 கோடி முறைகேடு; சிக்கியது கட்டுமான நிறுவனம்



எஸ்.பி.ஐ., உள்ளிட்ட, 15 வங்கிகளில் பெற்ற கடன் தொகை, 3,847.58 கோடி ரூபாயை, 'யூனிட்டி இன்ப்ராபிராஜக்டஸ் லிமிடெட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று, போலி நிறுவனங்களுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.



வாசகர் கருத்து (1)

  • DVRR - Kolkata,இந்தியா

    ஆணும் பெண்ணும் சமம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது பேப்பரை திறந்தாலும் கள்ளகாதலனுடன் இவன் மனைவி ஒட்டம், அரிவாள் மனையால் குடிகாரக்கணவனை வெட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி. இது தான் ஆண் பெண் சமம்???Equal Rights

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement