ஜெய்ஹிந்த் பாப்பா 6 வயது மகனின் உணர்ச்சிபூர்வமான அஞ்சலி

இன்னும் சிறிது நேரத்தில் அந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது உடலைச்சுற்றி பஞ்சாப் மாவட்டம் மொஹாலியில் உள்ள முல்லன்பூர் கிராமம் மொத்தமும் சோகத்தில் முழ்கிக்கிடக்கிறது.
மூவர்ணக் கொடி போர்த்திய கர்னல் மன்பிரீத் சிங்கின் உடலுக்கு மாநிலத்தின் கவர்னர் முதல் ராணுவ உயரஅதிகாரிகள் வரை அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தனர்
மவுனம் அமாவசை இரவு போல அந்த இடத்தில் அப்பிக்கிடந்தது
சிறு கேவலும்,விசும்பலும் கூட பெரிதாக கேட்டது

அந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒங்கி ஒலித்தது
''ஜெய்ஹிந்த் பாப்பா''
''பாரத் மாதா கே சபூத் கி ஜெய்"
எல்லோரது கவனமும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது
அங்கே ஒரு ஆறு வயது சிறுவன் ராணுவ உடையில் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தான், அவன்தான் அப்படியொரு உணர்ச்சி பெருக்கோடு கோஷம் போட்டுக் கொண்டிருந்தான்.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல இன்னும் சில நிமிடங்களில் மண்ணில் புதைக்கபடவிருக்கும் ராணுவ வீரரின் மகன்தான்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகளுடான சண்டையில் இறந்த நம் மூன்று ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.
இவர் மன்பிரீத் சிங்/42
ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையின் 19 வது பிரிவின் கர்னலாக பணிபுரிந்தார்
வீரமும்,தீரமும் மிக்கவர்.இவரது தாத்தா லக்மீர் சிங்,தந்தை ஷீத்தல் சிங் ஆகியோரும் ராணுவத்தில் பணியாற்றியவர்களே.

அவர்களைத் தொடர்ந்து ராணுவத்தில் சேர்ந்த மன்பிரீத் சிங் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணயாற்றிவந்தார். துணிச்சல் மிக்கவர்.
மனைவி ஜக்மீத் கவுர், 6 வயது மகன் கபீர்,3 வயது மகள் வாணி என்று இவரது குடும்பம் அளவானதும், அழகானதும், பாசமானதும் கூட
மகனுக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளை விட அப்பா வீட்டிற்கு வரும் போது சொல்லும் ராணுவ சாகச கதைகளே மிகவும் பிடிக்கும்.
அதிக நாட்கள் குடும்பத்துடன் இருக்கமுடியவில்லை என்ற குறையை தீர்க்க வருகின்ற டிசம்பர் மாதம் வரும்போது கூடுதல் நாட்கள் இருப்பதாகவும் மகனிடம் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவு பயங்கரவாதிகளின் தாக்குதல் துவங்கியது.
அவர்கள் எத்தனை பேர் என்றாலும் பராவாயில்லை வாருங்கள் ஒரு கை பார்ப்போம் என்று குழுவினருக்கு துணிச்சலை ஊட்டி பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதலை தொடர்ந்தார்.
இந்த சண்டையில் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டாலும் பின் வாங்குகிற வேகத்தில் வெறிபிடித்துப் போய் பயங்கரவாதிகள் சுட்டதில் நமது தரப்பில் கர்னல் மன்பிரீ்த் சிங் உள்ளீட்ட மூன்று ராணுவ வீரர்களும் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தனர்.
நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அவரவர் சொந்த ஊர்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
கர்னல் மன்பிரீத் சிங்கின் உடல் அடக்கத்தின் போது மொத்த கிராமமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் பலர் கண்ணீரை அடக்கமுடியாமல்,' மன்பிரீத் சிங் மாணவர்களிலே ஒரு ரத்னம், படித்த பள்ளிக்கு,பிறந்த வீட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் இதோ இப்போது நாட்டிற்கு... என்று மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் குலுங்கி குலுங்கி அழுதனர்.
அவர்களது அழுகைகளுக்கு நடுவே கர்னல் மன்பிரீத் சிங் உடல் குழிக்குள் இறக்கப் போகும் அந்த கடைசி நிமிடத்தில்தான் மகன் கபிர் அப்படியொரு குரலெழுப்பி அழாதவர்களையும் அழச்செய்துவிட்டான்
தன்னை பாதுகாப்பாக பிடித்திருந்தவர்களின் கைகளை உதறிவிட்டு பாப்பா,பாப்பா என்று அழுதபடி அப்பா உடல் இருந்த சவப்பெட்டி மீது முட்டி மோதி அழுதுகொண்டு இருந்தான்.

இனி யார இவனுக்கு ராணுவத்தின் சாகச கதையை சொல்வர்...
-எல்.முருகராஜ்
வாசகர் கருத்து (5)
உண்மையில் கண் கலங்கியது .வீர மரணம் .எங்கள் அஞ்சலிகள் .மகனுக்கு ஆறுதல்கள் .
அழவைக்காதீர்கள் முருகராஜ்
படிக்க முடியாமல் கண்ணீர் ததும்புகிறது. இந்திய மக்களுக்காக தன் நலம் மற்றும் தன் குடும்பநலம் பற்றி சிந்திக்காமல் தன் இன்னுயிர் ஈந்த வீரமறவனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. அவர் குடும்பத்தினருக்கு மனோதிடத்தை தருமாறு தெய்வத்தை வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏😢😞
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
முழுவதுமாக படிக்க முடியவில்லை, ஜெய் ஹிந்த் , ஆழ்ந்த இரங்கல்கள் ,