103 வயது வரை வாழ்ந்த பத்திரிகையாளர் ஆல்பிரட்

மும்பை மீரா தெருவில் உள்ள சிருஷ்டி காம்பளக்சில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தலைவர்களும், பொதுமக்களும் திரளாக வந்தவண்ணம் உள்ளனர்.
என் தந்தை ஆல்பிரட், எந்த பிரச்னையும் இல்லாமல் 103 வயது வரை நல்லபடியாக வாழ்ந்தார். இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று அவரது மகள் அனிதா துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் தகவல் சொல்லிக் கொண்டு இருந்தார்.
யார் இந்த ஆல்பிரட்
வால்டர் ஆல்பிரட் என்ற பெயர் கொண்ட இவரின் பூர்வீகம் மங்களூரு ஆகும். உயர்படிப்பிற்காக மும்பை சென்றவருக்கு ஊடகத்துறையில் நாட்டம் ஏற்பட்டுவிட பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளராக இளம் வயதிலேயே சேர்ந்தார்.
நவீனம் இல்லாத அந்தக்காலத்திலேயே பல பரபரப்பு செய்திகளை தந்தவர்.
நாடு சுதந்திரமடைந்த போது நள்ளிரவு பிரதமராக நேரு பதவியேற்றது, மகாத்மா காந்தி சுட்டுக் கொலையானது, இந்திரா எமர்ஜென்ஸி கொண்டு வந்தது, இந்தியா- பாக் சண்டை நிகழ்ந்தது என்று பல முக்கிய நிகழ்வுகளை களத்தில் இருந்து செய்தியாக்கியவர் இவர்.
பாகிஸ்தானில் செய்தி சேகரிப்பு பணியில் இருந்த போது, உளவு பார்க்க வந்ததாக பொய்க்குற்றம் சுமத்தி அவரை அந்நாட்டு ஜெயிலில் ஒன்றரை மாதம் அடைத்தனர், அதன் பிறகு உண்மை உணர்ந்து விடுதலை செய்தனர், அது கசப்பான அனுபவமே என்றாலும் ஆல்பிரட் அதையும் செய்தியாக்கினார்.
சுவராசியமாக இவர் செய்தி கொடுக்கும் பணியை பார்த்து, போப் ஆண்டவர் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிறப்பு செய்தியாளராக வந்திருந்து செய்தியாக்கச் சொன்னார்கள்.
தென்கிழக்கு ஆசியா முழுமைக்குமான செய்தியாளராக மாறிய பின் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா என்று பறந்து கொண்டே இருந்தார்.
நேரு, பாக்., அயூப்கான், இந்தோனேசியா சுகர்னோ என்று பல்வேறு நாட்டு தலைவர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை பெற்றிருந்தார். நேருவின் நிழலாக பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டு கால பத்திரிகை பணியில் இருந்து அலுவலக ரீதியாக விடைபெற்றாலும், அவருக்குள் குடிகொண்டு இருந்த பத்திரிகையாளன் அவரை சும்மா இருக்கவிடவில்லை.
'ப்ரீலான்சராக' சில பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதிக் கொடுத்து வந்தார். ஊடகத்துறையை நடத்தும் கல்லுாரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
படிப்பது, நீண்ட துாரம் நடப்பது, நிறைய பயணிப்பது என்பது இவருக்கு பிடித்த விஷயங்களாகும். 2017 ல் அதாவது அவரது 97 வயதில் அலெஸ்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால், எனது துறையில் எந்த நிலையிலும் நான் ஓழுக்கமுள்ளவனாக இருந்தேன். எதிர்மறையான எண்ணங்களை உள்ளே விடுவதே இல்லை. முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவதை கொள்கையாக வைத்திருந்தேன். வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான் என்றார்.
அவர் அவ்வளவுதான் என்று சொன்னாலும் அது அவ்வளவு எளிதல்ல.
எளிதாக்கிக் கொண்ட பத்திரிகையாளர் ஆல்பிரட் பலருக்கு முன்னோடி.
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!