ரயில் விபத்து நடந்தது எப்படி?
பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது, பகாநகர் பஜார் ஸ்டேசன் அருகே உள்ள மெயின் லைனிற்கு பதிலாக, லூப் லைனில் நுழைந்து, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதுவே விபத்திற்கு முக்கிய காரணம்.
இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே துவங்கியுள்ளது. மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை அறிய ரயில்வே முயற்சித்து வருகிறது.
சரக்கு ரயில் உடன் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7, 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது.
அதனை நிறுத்த முடியாத நிலையில் தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 , 3 பெட்டிகள் தடம் புரண்டன. முதல்கட்ட தகவல்படி, இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. ரயில்வேயின் விசாரணைக்கு பிறகே விரிவான தகவல் தெரியவரும்.
கோரமண்டல் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 128 கி.மீ., வேகத்திலும், பெங்களூரு ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 116 கி.மீ., வேகத்திலும் பயணித்தது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் 135 பேர் ரயிலில் பயணித்தனர் என்று கூறப்படுகிறது. முழு தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதில் இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள், காயமுற்றவர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் தவிக்கும் தமிழக மக்களை கண்டறியும் பணியும் நடக்கிறது.
இதனிடையே, ஒடிசாவில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் ஒன்று, பத்ராக் என்ற இடத்தில் இருந்து கிளம்பி உள்ளது. இந்த ரயில்,நாளை( ஜூன் 4) காலை 9 மணியளவில் சென்னை, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (27)
இதே மாதிரி மூன்று ரயில்களின் விபத்து 1978 ம் ஆண்டு ஜோலார்பேட்டை ஜங்ஷன் அருகே நடந்துள்ளது . அப்பொழுதும் ஒரு கூட்ஸ் வண்டியும் இரண்டு பயணிகளு ரயில்களும் மோதிக்கொண்டன . அப்பொழுது சிக்னல் சிஸ்டம் மனிதர்களின் கையில் இருந்தது . அந்த விபத்தும் இரவு பொழுதில்தான் நடந்தது . அது ஒரு கூட்ஸ் வண்டியின் கடைசி இரண்டு பேட்டிகள் தொடர்பு ( link Chain) அறுந்து விட்டதால் அவை நின்று விட்டன . அது என்ஜின் ஓட்டுனருக்கு தெரியவில்லை . பிறகு அதே பாதையில் ஒரு பயணிகள் வந்து மோதி பக்கத்து பாதையில் கவிழ்ந்து விட்டது. பிறகு அந்த பாதையில் இன்னொரு பயணிகள் ரயில் வந்து அதுவும் கவிழ்ந்து விட்டது . இந்த விபத்தும் அதே போலத்தான் இருக்கிறது .
நடந்தது கோர விபத்து. இதில் என்ன அரசியல் விமர்சனம்... இறந்த வர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. காயமடைந்த வர்கள் விரைவில் குணமாக வேண்டுகிறேன்
இது புதுவகையான ஆக்சிடெண்ட். இதுமாதிரி நடந்ததே இல்லை. எல்லாத்தையும் வேறு லெவலுக்கு கொண்டு போயிட்டாங்க
அரசு வேலைகள் அனைத்தையும் தனியார் வேலைபோல் மாற்றவேண்டும் , வேலைபோயிடும் என்று பயமிருந்தாலே ஒழுங்காக வேலைசெய்வானுக
45 ஆண்டு களுக்கு முன்பு இதே போன்ற ஒரு விபத்து வாணியம்பாடியில் நடந்தது... ஏற்காடு எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் மெயில் ஒரு கூட்ஸ் வண்டி என மூன்றும் மோதிக்கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டது..