'லஞ்சம் -என்னிடம் பறித்தனர்' எனும் சிறப்பு பகுதி, 'தினமலர்' நாளிதழில் திங்கள்தோறும் வெளியாகிறது. சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒவ்வொரு பணிக்கும், கோரிக்கைக்கும் பொதுமக்களிடம் எவ்வாறெல்லாம் அரசுத்துறைகளில் லஞ்சம் பறிக்கப்படுகிறது என்பதை, பாதிக்கப்பட்ட மக்களே எழுதும் சிறப்பு பகுதி இது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு லஞ்சம் கறக்கின்றனர் என்ற விவரமும் வெளியாகி வருகிறது. கடந்த 22ம் தேதி வெளியான இப்பகுதியில், மின் வாரியத்தில் ஒவ்வொரு 'வேலை'க்கும் எவ்வளவு லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி., வன்னிய பெருமாள், மின் வாரியத்தின் அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள், தலைமை தணிக்கை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: எந்த ஒரு சேவை அளிக்கவும் லஞ்சம் பெறக்கூடாது என்று கடுமையான உத்தரவு இருந்தும், மின் இணைப்பு வழங்குவதற்கு மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டிப்புடன் அணுக வேண்டிய ஒன்றாகும்.
தலைமை பொறியாளர்களும், மேற்பார்வை இத்தகைய செயல்பாடுகளை தடுக்க, அனைத்து பொறியாளர்களும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் இத்தகைய புகார்கள் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மின் வாரியத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலர்கள், இத்தகைய புகார்களை விரிவாகவும், விரைவாகவும் விசாரணை நடத்தி, எழுத்துபூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் டி.ஜி.பி., வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (10)
"தக்க ஆதாரத்துடன், புகார் அளிக்கப்பட்டால்," இதற்க்கு, போலீசும், டி.ஜி.பி-யம் எதற்கு. விஜிலென்ஸ் என்ற துறை ஒன்று உள்ளது. அவர்கள், எங்கே லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது நன்கு தெரிந்த பிறகு, சில காலம் () கழித்து கட்டாயம் பிடிப்பார்கள். ஆனால் அந்த வழக்கின் முடிவு விவரம் தெரியாது. லஞ்ச வழக்கில் சிக்கிய அலுவலர் அனைத்து அலுவலர்களையும் நன்கு கவனித்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து நிம்மதியாக, பதவி உயர்வு பெற்றுக்கொண்டு, மீண்டும் பணியில் சேருவார். கையும், களவுமாக பிடிபட்டவர், மீதான குற்றச்சாட்டின் இறுதியில், "உரிய ஆதாரம் இல்லை" என்று விசாரணை அலுவலர் தீர்ப்பு அளித்து மீண்டும் பதவி அளித்த, நிகழ்வுகள் நடந்துள்ளது.
பங்கு தராமல் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்.
லஞ்சம் வாங்குபவர்களுக்கு தூக்கு தண்டனையை ஒத்த (equal) ஒரு தண்டனை கொடுக்கப்படவேண்டும். லஞ்சம் வாங்கி இருக்கிறான் என்று நன்றாக அறிந்திருந்தும், அவர்களுக்காக வாதிட வரும் வக்கீல்களை நீதிமன்றம் கண்டிக்கவேண்டும். லஞ்சம் வாங்கியவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கும் தண்டனை மிக மிக கடுமையாக இருக்கவேண்டும்.
இவங்க லஞ்சம் வாங்கமாட்டாங்களா..???
இந்த சுற்றறிக்கை டிராமா நோட்டீஸ் போல அலுவலகங்களில் சுற்றிவந்து ரெகார்ட் ரூமின் மூடப்படும் கோப்புகளில் சேர்ந்துவிடும் அவ்வளவுதான்