ADVERTISEMENT
ஷெனாய் நகர், திரு.வி.க., பூங்காவைச் சுற்றி அத்துமீறி நிறுத்தப்படும், 'ஷேர்' ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால், மக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம், 102வது வார்டு ஷெனாய் நகரிலுள்ள புல்லா அவென்யூவில் செயல்படுகிறது.
இந்த புல்லா அவென்யூ மற்றும் அதைச் சுற்றியுள்ள, 2, 3வது தெருக்களில், சிலர் அத்துமீறி தனியார் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல், மூன்று சாலைகளின் சந்திப்பான சென்னை அரசு பள்ளி மற்றும் திரு.வி.க., பூங்கா அருகில், இருபுறங்களும், 'ஷேர்' ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், அவ்வழியாக வந்து சாலையில் திரும்பும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.
இதுகுறித்து, அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூறியதாவது:
ஷெனாய் நகரைச் சுற்றி, அப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். திரு.வி.க., பூங்காவிற்கு வரும் வானங்களும், குடியிருப்புகளில் நுழைவாயிலில் இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
காலை முதல் இரவு வரை, ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில் அமர்ந்து, சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதேபோல, பல்வேறு இன்னல்களுக்கு குடியிருப்பு மக்கள் ஆளாகின்றனர். இதுகுறித்து மண்டல அதிகாரிகள் மற்றும் அமைந்தகரை போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
மண்டல அலுவலகம் அருகில் இதுபோன்ற அட்டூழியம் நடப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!