ஒட்டன்சத்திரம் : கழிப்பறையின்றி திறந்தவெளி, பாடாய்படுத்தும் சுரங்கப்பாதை, சாக்கடைகள் சேதம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 16வது வார்டு மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.
வினோபா நகர், விஸ்வநாத நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள விஸ்வநாத நகரில் துாய்மை இந்தியா திட்டம் சார்பில் 2015 -- 16ல் கட்டப்பட்ட பெண்கள் சமுதாய கழிப்பறை இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வரவில்லை.
சில தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை. பல இடங்களில் சாக்கடை இடிந்து சேதமடைந்துள்ளது. இன்னும் பல இடங்களில் தெரு விளக்குகள் தேவை உள்ளது.
திண்டுக்கல் - கோவை அகல ரயில் பாதைக்கு தென்புறத்தில் இந்த வார்டு உள்ளது. இதனால் வடக்கு பகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு இப்பகுதி மக்கள் ரயில்வே லைனை தாண்டி வர வேண்டிய உள்ளது. ரயில்வே லைனை கடப்பதற்கு ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகளில் சுரங்கப்பாதை உள்ளது. கிழக்குப் பகுதியில் ரயில்வே கேட்டும் உள்ளது.
மழைக்காலத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ரயில்கள் இப்பாதையை கடந்து செல்ல நேரம் ஆகும் என்பதால் மழைக்காலத்தில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல தாமதமாகிறது. சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டா வழங்கவில்லை
எம்.சசிகுமார், பா.ஜ., நகர பொதுச்செயலாளர், விஸ்வநாத நகர்: விஸ்வநாத நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் 50-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. குடிநீர் மின் , சொத்து வரி அனைத்தும் செலுத்திய குடும்பங்களுக்கும் இன்னும் பட்டா வழங்கவில்லை.
சில தெருக்களில் சாக்கடை வசதி இல்லை. வார்டில் உள்ள பலருக்கு வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை நாடுகின்றனர். சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
மழைநீரால் பாதிப்பு
சிவமணி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், ஒட்டன் சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் இரு பக்கங்களிலும் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளை மழை காலத்தில் பயன்படுத்த முடிவதில்லை. அனைத்து நாட்களிலும் பயன்படுத்தும் படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை. பெண்கள் சமுதாய கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வசதிகள் நிறைவேற்றம்
பழனிச்சாமி, கவுன்சிலர் (தி.மு.க.,): பல ஆண்டுகளுக்கு மேல் வீட்டு பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 48 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 200 பேர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் பழுதான 11 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரு விளக்கு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடின்றி குடிநீர் கொடுக்கப்படுகிறது. புதிதாக சாக்கடை அமைப்பதற்கு நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
விரைவில் நிறைவேற்றப்படும். விஸ்வநாதன் நகர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. முனியப்பன் கோயில் அருகே ரூ.15 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரூ.7.5 லட்சம் செலவில் விஸ்வநாதநகர் மலைப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரும்பு குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது,என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!