Load Image
Advertisement

38 பத்திரிகையாளரின் பட்டா ஒரே நாளில் ரத்து முன்னாள் கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை

மதுரை:மதுரையில் மானியம், இலவசம் இல்லாமல் பத்திரிகையாளர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் தலா 5.25 லட்சம் ரூபாய் காலக்கிரையத்தில் அரசு வீட்டுமனை பெற்ற 38 பேரின் பட்டாக்களை, நீதிமன்றம் அறிவுறுத்தலையும் மீறி, பணி மாறுதல் ஆகிச்சென்ற கடைசி நாளில், முன்னாள் கலெக்டர் அனீஷ்சேகர் ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பத்திரிகை யாளர்களுக்கு அரசு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று, 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விலை நிர்ணயம்



அதன்படி, 2019ல் மதுரை சூர்யாநகரில் 86 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 3 சென்ட் நிலத்திற்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில், 46 பேர் பணம் செலுத்தி பட்டா பெற்று விட்டனர். அந்த வகையில், அரசுக்கு பத்திரிகையாளர்கள் 2.50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தியுள்ளனர்.

வீட்டுமனை உத்தரவில், 'பத்திரிகையாளர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் எவ்வித சொத்துக்களும், 50 கி.மீ., சுற்றளவில் இருக்கக் கூடாது' என்பன போன்ற நிபந்தனைகள் தவறாக விதிக்கப்பட்டன.

தமிழகத்தின் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கிய போது இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை.

எனவே, இந்த நிபந்தனையில் இருந்து தளர்வு அளிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோருக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மனுக்கள் அளித்துள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன.

இந்நிலையில், பட்டா பெற்றவர்களில் யாரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் இல்லை.

அவர்களுக்கு வீடு, நிலம் உள்ளது எனக்கூறி, 38 பேரின் பட்டாக்களை முன்தேதியிட்டு, பணிமாறுதலில் செல்வதற்கு முந்தைய நாளில் கலெக்டர் அனீஷ் சேகர் ரத்து செய்தார்.

கண்டனம்



அனீஷ்சேகரின் இந்த நடவடிக்கை, பத்திரிகை யாளர் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நல வாரியம் அமைத்துள்ள தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மதுரை பத்திரிகையாளர்களின் நலன்காக்க வேண்டும் எனவும் சங்கங்கள் வலியுறுத்திஉள்ளன.

சலுகையோ, மானியமோ இல்லை

பிரஸ் கிளப் ஆப் மதுரை சங்க தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:மதுரையில் எங்களுக்கு சலுகையோ, மானியமோ அளிக்கப்படவில்லை. காலக்கிரையத்தில் பெற்றோம். பத்திரிகையாளர் அனைவரும் வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும் தான், 5.25 லட்சம் ரூபாய் தயார் செய்து அரசுக்கு செலுத்தினோம். தவறான ஆணையில், தளர்வு கேட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் பட்டாவை ரத்து செய்து கலெக்டராக இருந்த அனீஷ்சேகர் எங்களை பழிவாங்கி, மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement