சிட்னி : அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார். அதற்கான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. 'அமெரிக்காவில் நீங்கள் தான் மிகவும் பிரபலம்' என்று கூறி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் 'ஆட்டோகிராப்' வாங்கினார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் மோடியின் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ''ராக் பாடகர்களை விட மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள உண்மையான, 'பாஸ்' பிரதமர் நரேந்திர மோடி தான்,'' என, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டார்.
சிட்னியின் மேற்கே உள்ள ஹாரிஸ் பார்க் பகுதிக்கு, 'லிட்டில் இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அறிவித்தார்.லிட்டில் இந்தியா பகுதியில், இந்திய வம்சாவளியினர் அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு வசிக்கும் மக்களில், 45 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இங்குள்ள குறிப்பிட்ட சில சாலைகளில், இந்திய உணவு விடுதிகள், இந்திய உடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளும் உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் போன்றவை, ஹாரிஸ் பார்க் பகுதியில் அங்குள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகின்றன.
தன் வெளிநாட்டு பயணங்களின்போது, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த வகையில், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கான பயணத்தின்போதெல்லாம், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். அப்போதும், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
வரவேற்பு
ஜப்பானில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். 'அமெரிக்காவில் நீங்கள் தான் மிகவும் பிரபலம். உங்களுடைய நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன' என்று குறிப்பிட்ட ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் உள்ள மிக பிரமாண்ட விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே நேற்று உரையாற்றினார். முன்னதாக அவருக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணிக்கும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பாரம்பரிய முறைகளின்படி நடன நிகழ்ச்சிகள், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய வம்சாவளியினர் வந்திருந்தனர். அரங்கத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் திரண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியை அறிமுகம் செய்து வைத்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பேசியதாவது: இந்த அரங்கில் அதிகளவு கூட்டத்தை இதற்கு முன், அமெரிக்க ராக் பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் நிகழ்ச்சியின்போது தான் பார்த்துஉள்ளேன்.
ஆனால், அதைவிட சிறப்பான வரவேற்பு மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது; அதிகளவு மக்கள் கூடியுள்ளனர். ஸ்பிரிங்ஸ்டனை, அவருடைய ரசிகர்கள், 'தி பாஸ்' என்று கூறுவர். ஆனால், உண்மையான பாஸ், பிரதமர் மோடி தான்!
முக்கியத்துவம்
நான் ஆஸ்திரேலியா பிரதமராக பதவியேற்ற ஓராண்டுக்குள், பிரதமர் மோடியை, ஆறாவது முறையாக நேரில் சந்திக்கிறேன். இது தான், நம் நாடுகளுக்கு இடையே உள்ள நட்பு. இந்தியாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம்.
ஏற்கனவே உலகில் அதிக மக்கள்தொகை உடைய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது; உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். இந்தியப் பெருங்கடலில், நம்முடைய மிகச் சிறப்பான நட்பு நாடு, இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய வம்சாவளியினர் பயணம் செய்வதற்காக, மெல்போர்ன் நகரில் இருந்து, 'மோடி ஏர்வேஸ்' என்ற பெயரில், 'குவாண்டாஸ்' நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. அதுபோல், க்வீன்ஸ்லாந்தில் இருந்து, 'மோடி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உறவு, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான கிரிக்கெட் போட்டிகளை போலவே, களத்திற்கு வெளியேயும் எங்களது நட்பு ஆழமானது. கடந்த ஆண்டு, ஆஸி., சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மறைந்த போது, லட்சக்கணக்கான இந்தியர்கள் துக்கம் அனுசரித்தனர். எங்களில் ஒருவரை இழந்தது போல் நாங்கள் உணர்ந்தோம். மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக இருப்பது போல், துக்க நேரத்திலும் நாம் ஒன்றாக நிற்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (27)
நண்பர்களே..திரு மோடி அவர்கள் சிறந்தவர் தான்..அதில் எந்த சந்தேகமும் இல்லை...அனால், இந்தியாவில் சரியான கல்வி முறை நாடு தழுவிய அளவில் இல்லாததினால், இங்கே உள்ள மக்கள் , திரு மோடி அவர்களை பற்றியும், திரு மோடி அவர்களின் எதிர்கால கனவு பற்றியும், புரிந்து கொள்வதில்லை. அதனால், மாநிலத்தில் உள்ள குறு நில மன்னர்கள், ஆட்சி தங்கள் வசம் இருக்க வேண்டும் என்று இல்லாததை சொல்லி, திரு மோடி அவர்களின் மேல் பொய் பிரசாரம் மேற்கோளின்றனர். இதற்கு ஒரே தீர்வு நாடு தழுவிய அளவில், ஒரே நவீன கல்வி முறை, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், ஒரே மாதிரி சிலபஸில் கொண்டு வரவேண்டும்..இல்லா விட்டால், மக்களுக்கு சாராயமும், பிரியாணியும், கொடுத்து ஏமாற்றி கொண்டே இருப்பர்...
hahaha
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மோடிக்கு ராஜ மரியாதை அளிக்கின்றனர்.
They afraid that they can't loot anymore.
No jobs in India also not recognized in India....