131 பேரையும் துணை முதல்வராக்கலாமே?
ஆர்.ஸ்ரீனிவாசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சட்டசபையில், கூட்டணிக் கட்சிகள் நீங்கலாக கழகத்திற்கு என, 133 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதில், ஒருவர்முதல்வராகவும், மற்றொருவர் சபாநாயகராகவும் உள்ளனர்.
நினைவில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்... காமராஜர் ஆட்சிக் காலத்தில், தமிழக அமைச்சரவையில் வெறும் ஏழு அமைச்சர்களே இருந்தனர். தற்போதைய அமைச்சரவையில், முதல்வருடன் சேர்த்து, 35 அமைச்சர்கள் உள்ளனர்.
மறைந்த, 'சோ' நடித்த, 'முகமது பின் துக்ளக்' திரைப்படத்தில், 'சோ' பிரதமராகவும், அவரது கூட்டணியில் வெற்றி பெற்று, எம்.பி.,க்களான மற்ற அனைவரையும், 'துணை பிரதமர்கள்' என அறிவித்து, ஆட்சி நடத்துவார்.
அதுபோல, 35 அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில், மூன்று பேரை மட்டும் துணை முதல்வர்கள் ஆக்கினால், முதல்வர்தவிர மீதியுள்ள, 31 பேருக்கும் மனக்கிலேசம் உண்டாகும். தாங்கள் துணை முதல்வர் பதவி வகிக்க தகுதியற்றவர்களா என்ற கவலையும், வெறுப்பும், கோபமும் உண்டாகும்.
அவர்களின் மனக்கவலைக்கு மருந்தாக, அமைச்சரவையில் உள்ள, 35 பேரில், முதல்வர் நீங்கலாக, மீதியுள்ள, 34 பேரையும் துணை முதல்வர்களாக அறிவித்து விடலாம். அவர்களும் மனம் மகிழ்வர்; அவர்களது குடும்பத்தினரும் பெருமை அடைவர். தமிழக மக்களும் ஆனந்தமடைவர்.

துணை முதல்வர்களாக, 34 பேரை நியமித்தாலும், நிர்வாகம் ஒன்றும் கூடுதலாக இயங்கி, மக்கள் குறைகள் தீர்ந்து விடப் போவதில்லை.
இப்போது எப்படி நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறதோ, அப்படித்தான், 34 துணை முதல்வர்களை நியமித்தாலும் நடக்கும். ஆனால், 34 பேருக்கும், தாங்களும் துணை முதல்வரே என்ற, 'கெத்து' கிடைக்குமல்லவா அல்லது 131 எம்.எல்.ஏ.,க்களையுமே, 'துணை முதல்வர்'களாக நியமித்து விடலாம். யார் உங்களை கேள்வி கேட்கப் போகின்றனர்?
வாசகர் கருத்து (35)
முகமது பின் துக்ளக் ஆட்சியில் நடந்தது போல் (உதவிப் பிரதம மந்திரிகளாக )தமிழகத்திலும் அணைத்து அமைச்சர்களுக்கும் உதவி முதல் அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும் .ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை
சுடாலின் ஏற்கனவே ஜப்பான் துணை முதல்வராக இருந்த அனுபவத்தில் இதையெல்லாம் செய்கிறார் போல. உதயநிதியை மட்டும் துணை முதல்வர் ஆக்கினால் கட்சிக்குள் சலசலப்பு வருமோ என்றுதான் மீதி இரண்டு பேருக்கு ஒப்பு சப்பாணி துணை முதல்வர்கள். மற்றபடி அவர்கள் துக்ளக் படத்தில் சோ சொல்லியபடி இலாகா இல்லாத துணை முதல்வர்கள்தாம்
ஏற்கனவே 5 துணை முதல் அமைச்சர்கள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ளனர்.
ஆளும் கட்சியில் இருந்தும் கூட்டணிக்கட்சியில் இருந்தும் அனைவரையும் துணை முதல்வராக ஆக்கிவிடுங்களேன்.
அப்போ உதய நிதி முதல்வர் ஆக முடியாதா...???