முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியாகிறது. 1979ல் 152 அடி தேக்க கேரள அரசு முட்டுக்கட்டை போட்டதால் 136 அடியாக குறைத்து நிலை நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்னையும் தலை தூக்கியது. தலைமதகுப் பகுதியான கம்பம் பள்ளத்தாக்கிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழக அரசு மற்றும் விவசாய சங்கங்கள் நடத்திய பல்வேறு சட்டப் போராட்டங்களை தொடர்ந்து அணையை நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறை நீங்கியது. இருந்த போதிலும் 152 அடி தேக்கினால் மட்டுமே மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை இன்றி தண்ணீர் வினியோகிக்க முடியும்.
சமீபத்தில் மதுரை குடிநீருக்காக லோயர்கேம்ப் வண்ணான்துறையில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை பார்வையிடுவதற்கு மதுரை மேயர் இந்திராணிபொன்வசந்த், துணை மேயர் நாகராஜ், 94 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து வந்தனர். இவர்கள் அணையில் 152 அடி தேக்குவதற்கு குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.மதுரை மேயர் குரல் கொடுப்பாரா
சதீஷ்பாபு, மாவட்டத் தலைவர், பாரதிய கிசான் சங்கம், கூடலூர்:
பெரியாறு அணையில் 152 தேக்கினால் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரத்திற்கும் கூட குடிநீர் பற்றாக்குறை இன்றி சப்ளை செய்ய முடியும். அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு விவசாயிகள், பொது மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தினால் மட்டுமே முடிந்தது. அதனால் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு மதுரை மேயர், கவுன்சிலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம்
பொன்காட்சிக் கண்ணன், தலைவர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்:
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வுக்குப் பின் 2014ல் உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்த தீர்ப்பு வழங்கியது. பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக விவசாயிகள் முன் வைத்து வரும் வேளையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனைக் கண்டித்து 2011ல் நடத்திய போராட்டம் போல் மீண்டும் நடத்தினால் மட்டுமே தென் தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியும். இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குரல் கொடுப்பது அவசியமாகும். மதுரை மேயரும், கவுன்சிலர்களும் குரல் கொடுப்பதுடன், மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!