எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தக்கூடிய அளவுக்கு, மோடி செல்வாக்கு மிக்கவர் என்கின்றனர். அப்படிப்பட்டவரால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், ஏழைகள் மிகவும் அவதிப்படுகின்றனர்' என, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
அவருக்கு நான் கூற விரும்புவதாவது:
'பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா' என்ற திட்டத்தின் வாயிலாக, ஏழை எளிய மக்கள், காசு இல்லாமல் வங்கிக் கணக்கு துவக்க முடியும்; அதற்கு மினிமம் 'பேலன்ஸ்' தேவை இல்லை. இதன்படி, கோடிக்கணக்கான நபர்கள் வங்கிக் கணக்கு துவக்கி உள்ளனர்.
'பிரதம மந்திரி நிவாஸ் யோஜனா' வாயிலாக, வீடில்லாத எழை மக்களுக்கு, வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது; இத்திட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
'ஜல் ஜீவன்' திட்டப்படி இலவச குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. இலவச எரிவாயு திட்டத்தின்படி, லட்சக்கணக்கானவர்கள் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்.
மின்சார வசதியே இல்லாத ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு, மத்திய அரசு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டிற்கு, ௬,௦௦௦ ரூபாய், மூன்று தவணைகளாக அவர்களின் வங்கிக்கணக்கிலே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
தரமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன; ராணுவம் பலப்படுத்தப்படுகிறது. 'அக்னிபத்' திட்டத்தில், ராணுவத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
'பிரதம மந்திரி' மருத்துவகாப்பீடு திட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கிறது. மேலும், மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, மலிவு விலையில் மருந்து பொருட்கள் விற்கப்படுகின்றன.
முன்னர் பதவியில் இருந்த அரசுகள், 60 ஆண்டுகளாக செய்யாத வசதிகளை, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்து கொடுத்துள்ளது.
'திராவிட மாடல்' ஆட்சியில், மத்திய அரசின் பல நல்ல செயல்பாடுகள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே, கழக ஆட்சியாளர்கள் சொல்லும் பொய் புரட்டுகளை நம்பாமல், உண்மையை ஆராய்ந்து பார்த்தால், மோடி ஆட்சியால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு என்பது தெரியும்.
பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்க!
ஜி.நாராயணசாமி,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், அரசியல்
தலைவர் ஒருவர் தன் பிறந்த நாளன்று, கட்சித் தொண்டர்கள்
ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்தளித்தார். விருந்து சாப்பிட்டு
புறப்பட்டவர்களுக்கு, ஆளுக்கொரு மரக்கன்றும் கொடுக்கப்பட்டது.
பிறந்த
நாள் விழா நடந்த மண்டபத்திற்கு அருகே தான் எங்களின் வீடு உள்ளது. அருகில்
உள்ள என் கடைக்கு சென்றிருந்த நான், மதிய உணவுக்காக வீடு திரும்பிய போது,
எங்கள் குடியிருப்பின் குப்பைத் தொட்டியில், பல தொண்டர்கள் மரக்கன்றுகளை
வீசிச் சென்றபடி இருந்தனர்.
அதாவது, அரசியல் பிரமுகர் அளித்த
விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளைத் தான் அப்படி
வீசிச் சென்றனர்; இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் பலரும் வருத்தம்
அடைந்தனர்.
மரக்கன்றை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற கட்சித்
தொண்டர் ஒருவரை வழி மறித்து, 'மரக் கன்றை, இப்படி குப்பை தொட்டியில் வீசி
எறிந்து விட்டு போகிறீர்களே... வீட்டுக்கு எடுத்துட்டு போய் நட்டு
பராமரிக்கலாம் அல்லவா?' என்று வினவினேன். அதற்கு அந்த தொண்டர், 'பிரியாணி
சாப்பிட கூப்பிட்டனர்; சாப்பிட்டு விட்டோம். மரக்கன்றை நட்டு வைக்க,
எங்களுக்கு சொந்த வீடா இருக்கிறது?' என்று சொன்னதை கேட்டதும், நொந்து
போனேன்.
எனவே, பிறந்த நாள் விழா, திருமண விழா உள்ளிட்ட விழாக்களை
நடத்துவோர், அதில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளோ, காய்கறி விதைகளோ,
எதையும் இலவசமாக கொடுப்பதற்கு முன், ஒரு முறைக்கு ஒன்பது முறை யோசித்துக்
கொடுப்பது சிறந்தது.
இல்லாவிட்டால், காசு கொடுத்து வாங்கி
வினியோகித்த மரக்கன்றுகள் உள்ளிட்டவை, இப்படித்தான் வீணாகி குப்பைத்
தொட்டிக்கு போகும். உரியவர்களுக்கு அவற்றை கொடுத்தால், அதனால் நன்மை
உண்டாகும்; பொருந்தாதவர்களுக்கு கொடுத்தால், அது பயனின்றி போகும். அதாவது,
பாத்திரமறிந்து பிச்சை போடுங்க என்பதற்கேற்ப செயல்படுங்க!
'ஹீரோயிசம்' வேண்டாம் சீமான்!
ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: அரசியல் தலைவர்கள் பலருக்கு, ஒரு வித பழக்கம் உண்டு... தாங்கள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் கூடியிருந்தால், உடனே குஷியாகி விடுவர்.பொதுமக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்னவெல்லாமோ பேசுவர்; முடியாத விஷயத்தையும், முடித்து விடுவது போல வாயால் வடை சுடுவர்.
கடந்த, ௧௯௬௨ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 'வடவர்கள் நம்மவர்கள் அல்ல; அவர்கள் நல்லவர்கள் அல்ல; அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' என்று பேசினார்.
ஆனால், ராஜ்யசபா எம்.பி.,யாகி, பார்லிமென்டில் போய் அமர்ந்ததும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
அதேபோல, எம்.ஜி.ஆர்., ஒரு முறை, 'மாநில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்' என்றார்; பின், அதை மாற்றிக் கொண்டார்.
இதெல்லாம், கூட்டத்தை பார்த்தவுடன், அவர்களுக்கு ஏற்பட்ட 'அலர்ஜி'யால் பேசியதாகும்.
ஆனால், ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜர் போன்ற முதிர்ந்த தலைவர்கள், இப்படி ஒருபோதும் பேசியதில்லை; என்றும், எங்கும் ஒரே பேச்சு தான்.
இப்போது தமிழகத்தில்,'மைக் தலைவர்' என, சிலரால் செல்லமாக அழைக்கப்படும், நாம் தமிழர் கட்சி சீமானும், கூட்டத்தை பார்த்தவுடன் மிரண்டு போய், என்னன்னவோ பேசுகிறார்.வட மாநிலத்தவரை வேலைக்கு வைப்பது தவறு என்று குதிக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்; நிறைய சம்பாதிக்கின்றனர்.
அப்படி இருக்கையில், ஏழை வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்தால் பாவமா? வடமாநிலத்தவர்குறைந்த சம்பளம், நீண்ட நேரம் வேலை என்றாலும், சந்தோஷமாக ஏற்று பணியாற்றுகின்றனர்; அதை ஏன் கெடுக்க வேண்டும்.
திரைப்படத் தொழிலில் எத்தனையோ வடமாநிலத்தவர் நடிகர் - நடிகையராக, நடன இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சீமான் எதிர்ப்புத் தெரிவிப்பாரா? நமக்கு துபாயில், அமெரிக்காவில்அதிக சம்பளம்; வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் அதிக சம்பளம்... அவ்வளவு தான்.
சீமான் போன்றவர்களின் பேச்சை, பெரிய நடிகர்கள் கண்டிக்க வேண்டும். ஒரு பக்கம், 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று கூறி விட்டு, மறுபக்கம் ஏழைத் தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது எப்படி நியாயமாகும்.
எனவே, வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில், 'ஹீரோயிசம்' காட்டுவதை, சீமான் கைவிட வேண்டும்.
வாசகர் கருத்து (6)
நம்ம ஜி யால் வானத்தை வில்லாய் வளைக்க முடியும் ,வளைக்கத் தெரியும் ஆனால் இந்தியாவில் விலைவாசி உயர்வை மட்டும் கண்டிப்பாக அவரால் கட்டுப்படுத்தவே முடியாது,அது நிச்சயம் அவருக்குத் தெரியாது ,அதனால் விலைவாசி மட்டும் நித்தம் ஏற்றிக்கொண்டே இருப்பார் .
மோடிஜியும், பாஜக அரசும் மக்களுக்கு செய்வதும், சொல்வதும் தமிழ் மக்களைச்சரியாக சென்றடையவில்லை. இதற்கு தமிழக பாஜகவும் ஒரு காரணம். மக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினால்தான் புரியும்.
எங்கள் வீட்டில் ஒரு சிறிய பழுது பார்க்க உள்ளூர் ஆட்கள் கேட்ட தொகை, அதிரடியாக இருந்தது. நண்பர் ஒருவர் தெரிவித்த வட மாநிலத்தவர் ஒருவர் அந்தத் தொகையில் கால் பங்கில் அருமையாக செய்து கொடுத்தார் அவருக்கு கட்டுப்படியானது உள்ளூர்க்காரருக்கு எதனால் ஆகவில்லை?
நம்ம ஜி "கோயபல்ஸ் பொய்" மற்றும் வாயில வடை ..