Load Image
Advertisement

விபத்து, அவசர சிகிச்சை மருத்துவமனை திறப்பு... விரைவில்! திருமழிசையில் இறுதிகட்ட பணிகள் விறுவிறு

Tamil News
ADVERTISEMENT
திருமழிசை: தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்குவோரின் உயிரை காப்பதற்காக திருமழிசையில், 4 கோடி ரூபாயில் விபத்து மற்றும் அவசர கால மருத்துவமனை கட்டும் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது, திருமழிசை பேரூராட்சி.

தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தச் சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவது வாடிக்கையாகிவிட்டது.

விபத்தில் சிக்குவோரை மீட்டு, உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளை உடைய அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலைப் பகுதியில் இல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், பலர் உயிரிழக்கின்றனர்.

இச்சாலையில் விபத்தில் சிக்குவோரை மீட்டு, அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, திருவள்ளூர் போன்ற அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு, மருத்துவமனை செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலர் இறப்பது தொடர்கிறது.

நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் இருந்தால், விபத்தில் சிக்குவோருக்கு உதவியாக இருக்கும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, திருமழிசையில், தமிழக அரசு உத்தரவின்படி 4 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

சுகாதாரப் பணிகள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும், 2022ம் ஆண்டில் 'நம்மை காக்கும் 48' திட்டம் துவங்கப்பட்டது.

இதன் கீழ், தமிழக அரசு உத்தரவுப்படி, திருமழிசையில் 4 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இத்திட்டம் மட்டுமில்லாது, சிகிச்சை வசதிகள், அதன் கட்டமைப்பு, பணியாளர்கள் செயல்பாடுகள் அடிப்படையில், பிற மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் வகையில், இந்த விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு வரும் நோயாளிகளின் விபரம், உடனடியாக கணினியில் பதிவு செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, ஆய்வுகள், தேவைப்படும் சிகிச்சைகள் 'அப்டேட்' செய்யப்படும்.

அதன் அடிப்படையில், அடுத்தடுத்த 'ஷிப்ட்'களில் வரும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க உதவியாக இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த விபத்து மற்றும் அவசர கால மருத்துவமனை, கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்காமல், உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனைகள் எடுத்து தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், அவசர சிகிச்சைக்கு வருவோரின் இறப்பு எண்ணிக்கை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement