ADVERTISEMENT
படப்பை: மணிமங்கலம் ஏரியில் இரவு நேரத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகாவில் மணிமங்கலம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 18.60 அடி நீர்மட்டம் உயரம் கொண்டது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி மணிமங்கலம், கரசங்கால், சேத்துப்பட்டு, வரதராஜபுரம் ஆகிய கிராமங்களில் 1,500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஏரியில் சேத்துப்பட்டு அருகே ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் 15 அடி ஆழம் வரை மண் அள்ளி லாரிகள் மூலம் மண் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் —மணிமங்கலம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணி செய்யும் ஒப்பந்ததாரர், மணிமங்கலம் ஏரியில் இருந்து முறைகேடாக மண் அள்ளி சாலையை சமன்படுத்துகிறார்.
அரசு பயன்பாட்டிற்கு தேவை என்றாலும் முறையான அனுமதி பெற்றுதான் ஏரியில் மண் அள்ள வேண்டும்.
ஆனால், மணிமங்கலம் ஏரியில் கனிம வளத்துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை அனுமதியின்றி இரவு நேரத்தில் மண் கொள்ளை நடக்கிறது. மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து படப்பை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமாரிடம், கேட்டபோது, ''மணிமங்கலம் ஏரியில் மண் அள்ள அனுமதி கொடுக்கவில்லை. மண் அள்ளுவது குறித்து எந்த புகாரும் இதுவரை வரவில்லை,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!