சிப்காட் வழியே பி.எம்.மித்ரா திட்டம்
சென்னை : பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தை, தமிழகத்தில் சிப்காட் நிறுவனம் வழியே செயல்படுத்த வலியுறுத்தி, பிரதமர் மோடி, மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியருப்பதாவது:
தமிழகத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைக்க, விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தை தேர்வு செய்துள்ளதற்கு நன்றி. இப்பூங்கா வழியாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பெரிதும் பயனடையும்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமையாக, 'சிப்காட்' எனப்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் செயல்படுகிறது.
இப்பூங்கா அமைய உள்ள இடத்தில், ஏற்கனவே, 1,052 ஏக்கர் நிலத்தை, சிப்காட் நிறுவனம் வைத்துள்ளது. திட்டத்தை உடனே அங்கு செயல்படுத்த தயாராக உள்ளது.
சிப்காட் நிறுவனம், பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி, தன் திறனை நிரூபித்துள்ளது. மாநிலத்தில், 2,890 நிறுவனங்கள், 3.94 லட்சம் பணியாளர்களுடன், 38 ஆயிரத்து, 522 ஏக்கரில், 28 தொழிற்பேட்டைகளை நிறுவி உள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்யும், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், சிப்காட் தொழிற் பூங்காக்களில், தொழில் துவங்க விரும்புகின்றன. தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள், குறைந்த அளவிலேயே வெற்றி கண்டுள்ளன.
பி.எம்.மித்ரா பூங்காவை, சிப்காட் நிறுவனம் வழியே செயல்படுத்தினால், இந்த திட்டத்தின் நோக்கங்களை, வெற்றிகரமாக அடைய இயலும். எனவே, தமிழகத்தில் சிப்காட் நிறுவனம் வழியே, பி.எம்.மித்ரா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உருப்பட்ட மாதிரிதான். ஸ்டிக்கர் ஒட்டிக்கனும். வேறென்ன.