குண்டாஸ் கைது உத்தரவு எதிரான வழக்கு தள்ளுபடி
மதுரை : திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கல்லிடைக்குறிச்சி செம்பத்திமேடு பகுதியில் பொறியாளர் சுகுமார் 2022 மே 15 ல் கொலை செய்யப்பட்டார். ஆசைத்தம்பி அலெக்ஸ்குமார் கதிவரன் வினோத்குமார் மீது கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.
சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியதால் ஆசைத்தம்பி உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஜூன் 8 ல் திருநெல்வேலி கலெக்டர் உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டனர். கைது உத்தரவை எதிர்த்து ஆசைத்தம்பி உட்பட 4 பேர் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு: கைது உத்தரவை எதிர்த்து தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கைது உத்தரவு பிறப்பிப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்தி உரிய நேரத்தில் ஆவணங்கள் வழங்கவில்லை.
அரசு தரப்பு: உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பிய மனுவை பல்வேறு துறைகளுக்கு அனுப்பி விளக்கம் பெறுவதில் அவசர வேலைகளால் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருந்ததால் மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: தாமதத்திற்கு அரசு தரப்பில் அளித்த விளக்கம் நியாயமானது. அதை இந்நீதிமன்றமும் ஏற்கிறது. கொலையில் கைதானவர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு அவர்கள் தரப்பு வாதத்தில் எவ்வித தகுதியும் இல்லை என இந்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!