கல்வி அறிவு பெற்ற பெண்களின் விகிதத்தில் முன்னேற்றம்!

நாடு முழுதுமான கல்வி அறிவு பெற்றவர் விகிதம் குறித்து, தேசிய அளவிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்த முடிவுகளின் விபரம்:
நம் நாட்டிலேயே அதிகபட்ச கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில், 92.2 சதவீத மக்கள் எழுதப் படிக்க தெரிந்தவர்களாக உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில், 91.85 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
படிப்பு அவசியம் இல்லை
இந்த பட்டியலில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இங்குள்ள மக்களில் 91.33 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்று உள்ளனர்.
நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்ச கல்வி அறிவு பெற்ற மாநிலமாக பீஹார் உள்ளது. இங்கு, 61.8 சதவீத மக்கள் மட்டுமே எழுதப் படிக்க தெரிந்தவர்களாக உள்ளனர்.
கல்வி அறிவு குறைவாக உள்ள மாநிலங்களின் வரிசையில், அருணாச்சல பிரதேசம், 65.3 மற்றும் ராஜஸ்தான் 66.1சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நாட்டில், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவ - மாணவியரின் ஒட்டுமொத்த விகிதம் 12.6 சதவீதமாக உள்ளது. இதில், 19.8 சதவீதம் பேர் இடைநிலைக் கல்வி வரை வந்து படிப்பை நிறுத்தி உள்ளனர்.
இதில், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். படிக்கும் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும், பெண்களுக்கு படிப்பு அவசியம் இல்லை என்ற மனநிலையுமே இந்த அவலத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சுதந்திரம்
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கல்வி அறிவு மிக குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் கிராமப்புறங்களில் வசிப்போரின் கல்வி அறிவு 67.77 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 84.11 சதவீதமாகவும் உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஒட்டுமொத்த கல்வி அறிவு 9 சதவீதமாக இருந்தது. 11 பெண்களில் ஒருவர் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தனர். இந்த நிலை தற்போது வெகுவாக மாறி உள்ளது.
இன்றைய சூழலில், நம் நாட்டில் 77 சதவீத பெண்கள் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். பெண்கள் கல்வியில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததை விட, 68 சதவீத வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். ஆண்களில் 84.7 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியில் அனைவரையும் உள்ளடக்கிய, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'சமக்ரா சிக் ஷா' என்ற திட்டத்தை மத்திய அரசு 2018 - 19ல் கொண்டு வந்தது.
இத்திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலவு செய்கின்றன. இத்திட்டத்துக்கான நிதியை முழுதுமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2021 - 22ல், சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 90 சதவீத நிதியை தமிழகம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!