தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம் கூட்டி 'அரசியலாக்கிய' அதிகாரிகள்
கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, தமிழறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து கருத்து கேட்டு அரசுக்கு தெரிவிக்க உத்தரவிட்டனர். இதன்படி, ஹிந்து அறநிலையத்துறையினர், தென் மாவட்டங்களில் கருத்து கேட்பதற்காக திருநெல்வேலியில் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள், குமரலிங்கனார், சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்ப்பு
முதலில் பேசிய சுகிசிவம், உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். தொடர்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், 'அனைவரும் கருத்து தெரிவிக்கலாம்' என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் தயாசங்கர், செயலர் சுரேஷ், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பிரம்மநாயகம், ஹிந்து மக்கள் கட்சி உடையார் ஒருபுறமும், தமிழர் அமைப்பின் நிர்வாகி வியனரசு, நாம் தமிழர் அமைப்பினர் மற்றொரு புறமும் அமர்ந்திருந்தனர்.
ஹிந்து முன்னணி ராகவேந்திரன், ''அறநிலையத்துறை நடத்தும் கருத்து கேட்பு கூட்ட மேடையில் ஒரு சுவாமி படம் கூட இல்லை,'' என, கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, அவசர அவசரமாக நெல்லையப்பர் படம் மேடையில் உள்ள பேனரில் பொருத்தப்பட்டது.
ஹிந்து அமைப்பின் சார்பில் பாஸ்கர் பேசுகையில், ''கோவில் கும்பாபிஷேகங்கள் காலம் காலமாக ஆகமவிதிப்படி நடந்து வருகிறது. முன்பு எப்படி நடத்தப்பட்டதோ, அதே போல தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.
இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஒருவர் மேடை ஏறி ஹிந்து முன்னணியினரை பார்த்து, 'இங்கு கூச்சல் குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்' என்றார். தொடர்ந்து ஹிந்து முன்னணி, பா.ஜ,வினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள், 'இனி மேடையில் வாத, பிரதிவாதங்கள் தேவையில்லை. உங்களுக்கு தரப்பட்டுள்ள படிவத்தை நிரப்பித்தாருங்கள்' என்றார்.
சுகிசிவம், 'கூச்சல் போடாதீர்கள்' என்றார். ஆனால், அவரை நோக்கி, 'ஹிந்துக்களின் விரோதி சுகிசிவம் வெளியேறு' என, தொடர்ந்து ஹிந்து அமைப்பினர் கோஷம் எழுப்பினர். போலீசார் இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.
கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில், அறநிலையத் துறை அதிகாரிகள், ஒவ்வொரு கோவிலில் இருந்தும், 10 பேரை அழைத்து வந்து அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை, படிவங்களில் எழுதிக் கொடுக்க செய்தனர். இது முறையான கருத்து கேட்பு கூட்டம் அல்ல எனக்கூறி, பங்கேற்றவர்கள் கருத்து கேட்பு நிரப்பு படிவங்களை கிழித்தெறிந்தனர்.
நெறிமுறை
பொன்னம்பல அடிகள் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்த நெறிமுறைகளை வகுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம், முதன்முதலாக திருநெல்வேலியில் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களில் கருத்து கேட்போம்.
பாரம்பரிய குடமுழுக்கு நடத்துவதற்கு இது எதிரானது அல்ல. பாரம்பரிய குடமுழுக்கு விழாக்களில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான நெறிமுறைகளை மேற்கொள்ளும் கருத்து கேட்பு கூட்டம் தான் இது. எல்லோரது கருத்துக்களையும் படிவங்களாக பெற்றுள்ளோம். மொத்தம், 100 மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து கேட்பு கூட்டத்தில், மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் பங்கேற்றார். அவர் அய்யப்பன் என பெயர் நிரப்பிய படிவத்துடன் இருந்தார். அவரை கண்டுபிடித்த அமைப்பினர், 'ஹிந்து கோவில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாற்று சமயத்தினர் எப்படி அனுமதிக்கப்பட்டனர்?' என, கேள்வி எழுப்பினர். இதையடுத்து, போலீசார் அவரை வெளியேற்றினர்.
வாசகர் கருத்து (97)
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் குடமுழுக்கில் தமிழா? சமக்கிருதமா ? என்பதற்காக அல்ல . தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற ஆணையில் தெளிவாகக் ஆணையிடப்பட்டுள்ளது. கருத்து கேட்புக் கூட்டம், தமிழில் என்னென்ன மந்திரங்களை ஓதலாம் ? என முடிவு செய்வதற்காகவே கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழில் என்னென்ன மந்திரங்கள் ஓதலாம் என்று கருத்து கூற வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் ஒருவரைக் கூட பேச விடாதது அநியாயம் அதுவும் இந்த வழக்கைத் தொடுத்து ஆணை பெற்ற இதுவேத மறுமலர்ச்சி இயக்கத்தைக்கூட பேச வைக்காதது திட்டமிட்ட சதி இதற்கு பொறுப்பானவர்கள் இறைவன் முன் பதில் விரைவில் சொல்லியே ஆக வேண்டும்.
போலீசார் வன்முறை வழக்கு போட்டு மாவுக்கட்டு போடலாம். போலீசார் செய்வார்களா?
இங்கே ஆகமவிதின்னு சொல்றவனுக்கு அதிலே அ, ஆ கூட தெரியாது. ஆனா கூவல் சவுண்டா இருக்குது. .
ஹெலிகாப்டர் வெச்சி பூவை கொட்டுறாங்க. ஸ்ட்ரீமிங் வீடியோ போடுறாங்க, ஆகம குப்புற விழாதா?
உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக தீர்ப்பு உள்ளது. அதை ஏன் நீதிபதிகள் மறந்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. வேதம், உபநிஷத்துக்கள் என்ன சொல்கிறதோ அதைத்தான் இந்து தர்மம் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஆகமவிதிகளையும் வேதமே வகுத்திருக்கிறது. இந்துசமய அறநிலையத்துறை என்று பெயர் வைத்துக்கொண்டு இந்துதர்மத்தை எப்படி மீறி செயல்படலாம். சமூக நீதி, சமத்துவம் இதையெல்லாம் இந்துதர்மமே சொல்லியிருக்கிறது. ஆகம விதி சம்பந்தமாக அரைவேக்காட்டுத்தனமாக கொஞ்சம் மட்டுமே தெரிந்துகொண்டு பக்தர்களின் மனதை புண்படுத்தக்கூடாது.