சென்னை : சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்பட்டு வரும், 'வந்தே பாரத்' ரயிலில், இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
பயணியரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், இதர வழித்தடங்களிலும், 'வந்தே பாரத்' ரயில் சேவையை துவங்க, தெற்கு ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது.
அதிநவீன வசதிகள்
சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, 5வது, 'வந்தே பாரத்' ரயில், தென் மாநிலங்களில் முதல் சேவையாக, சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே, 2022 நவம்பர் முதல் இயக்கப்பட்டது.
புதன்கிழமை தவிர, மற்ற ஆறு நாட்களில், இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து அதிகாலை, 5:50க்கு புறப்பட்டு, பெங்களூரு வழியாக மைசூரை, பகல், 12:20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து மதியம், 1:05க்கு புறப்பட்டு, அதே நாள் இரவு, 7:30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். காட்பாடி, பெங்களூரில் மட்டுமே, இந்த ரயில் நின்று செல்லும்.
அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்பட, பல்வேறு வசதிகளை உள்ள இந்த ரயிலில், 16 பெட்டிகள் உள்ளன. 1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும்.
சென்ட்ரல் - மைசூருக்கு, 'ஏசி சேர் கார்' கட்டணம் 1,200 ரூபாய்; 'ஏசி' சிறப்பு வகுப்பு பெட்டி கட்டணம், 1,980 ரூபாய்.
சொகுசாக பயணம்
தற்போது மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் இந்த ரயில் செல்கிறது. விரைவில், இதன் வேகம், 130 கி.மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது.
ஆரம்பத்தில் டிக்கெட் முன்பதிவு, 90 சதவீதமாக இருந்தது; தற்போது, 130 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணிப்போரின் ரயிலாக, வந்தே பாரத் உருவெடுத்துள்ளது.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
'வந்தே பாரத்' ரயில், சர்வதேச தரத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை - மைசூருக்கு, 6:30 மணி நேரத்தில் செல்ல முடிகிறது.
இதுவே, இதர விரைவு ரயில்களில் பயணித்தால், 9:25 மணி நேரமாகும். மற்ற விரைவு ரயில்களை காட்டிலும், இந்த ரயிலில் சொகுசாக பயணம் செய்ய முடியும்.
130 கி.மீ., வேகம்
எப்போதும் பளிச்சென இருக்கிறது; பயணம் செய்யும் போது, அதிர்வு மிகவும் குறைவாக உள்ளது. துவக்கத்தை காட்டிலும், தற்போது வேகமாக செல்கிறது. இந்த ரயிலின் சேவை, தமிழகத்தின் பிற வழித்தடங்களிலும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் - மைசூரு வழித் தடத்தில், பயணியரின் முதல் தேர்வாக, 'வந்தே பாரத்' ரயில் மாறியுள்ளது. மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்ல, பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்; விரைவில் வேகம் அதிகரிக்கப்படும்.
இந்த ரயில் மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உள்ளது. படிப்படியாக வேகத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். டிக்கெட் முன்பதிவும் உயர்ந்துள்ளது. 'ஏசி' சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணிக்க, அடுத்த ஒரு வாரத்திற்கு டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
இந்த ரயிலில், 2022 நவம்பரில், 60 ஆயிரம் பேர்; டிசம்பரில் 1.01 லட்சம் பேர்; ஜனவரியில் 1.12 லட்சம் பேர்; பிப்ரவரியில் இதுவரை, 40 ஆயிரம் பேர் என, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
பயணியரின் வருகை சிறப்பாக இருப்பதால், சென்னை - கோவை உள்ளிட்ட சில வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில் சேவை துவங்க, ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில் ஓட்டுனர்கள் சிலர் கூறுகையில், 'வந்தே பாரத் ரயிலை ஓட்டுவது எளிதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்துடன் 'இன்ஜின்' அமைக்கப்பட்டுள்ளதால், ரயிலின் வேகத்தை விரைவாக கூட்ட முடிகிறது' என்றனர்.
வாசகர் கருத்து (14)
உன்மையில் இது ஓரூ தோல்வி திட்டம், இபோது மக்கள் அந்த ரயிலில் என்ன உள்ளது என்பதை பார்க்க ஆர்வ மிகுதியில் செல்கிறார்கள், அடுத்த விடுமுறை காலங்களில் குழந்தையுடன் செல்வார்கள், ஜூன் முதல் ஈ அடிக்கும் இந்த ரயில், உண்மையா சொன்ன இந்த ரயில்லால் லாபம் அடைந்தது இருவர், ஒன்று ரயில்வே நிர்வாகம், இரண்டு யூட்டுபேர்ஸ் .. review போட்டு நல்ல சம்பாதிக்கிறார்கள்... இந்த யூட்டுபேர்ஸ் இல்லை என்றல் ஒருத்தரும் இந்த ரயில் இருப்பது பலபேருக்கு தெரியாது..
முதலாவது:::::: யானை வாங்க காசு இருக்காம் அங்குசம் வாங்க வழியில்லை என்ற கதையாகி விட கூடாது+++அதாவது வந்தே பாரத் வழித் தடத்தை கூடுதல் செலவு செய்து சிறப்பு கவனம் செலுத்தி விபத்து வாய்ப்பு அற்ற நிலையை பராமரிப்பு பணி நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்++++ஒரு சிங்கிள் விபத்து ஏற்பட்டாலும் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்+++ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள்.++++தானியங்கி ரெயில்வே கேட்டுகள் மட்டுமே செயல் பட வேண்டும்+++++டெயில் பீஸ்:::: கல்லெறி கும்பலையும் ஒடுக்க வேண்டும்.
At least introduce bus route between Marandahalli and Morappur....to catch trains to Chennai/ coimbatore.....now we have to go to Palacode / Dharmapuri and again buses going to Arur to reach Mirappur....we need direct bus service via kaarimangalam to Morappur
இந்த சிறப்பு ரயிலில் Ticket Booking செய்யும்போது உணவு தேவையில்லை என்ற option நாம் தேர்வு செய்தால் ₹.142 குறைவாக செலுத்தும் வசதியும் உண்டு.
எல்லாரும் அம்பானி ,அதானி ஆக முடியாதே,அதனால் தான் சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டி உள்ளது...