எரிசக்தி துறையில் முன்னேறும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்
பெங்களூரு: எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது என பிரதமர் மோடி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதனால், மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மத்திய - மாநில திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று (பிப்.,6) கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர் மோடி மாதவரா அருகில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வார விழாவை, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். பெங்களூரு தொழில்நுட்பம் நிறைந்த நகரம். இந்திய ஏரிசக்தி வார நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறேன்.
சமீபத்தில் சர்வதேச நிதியம், 2023ம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் நிறைந்த நாடாக இருக்கும் என கணிப்பு கூறுகிறது. கொரோனா தொற்று காலத்திலும், இந்தியா உலகளவில் பிரகாசமான இடத்தில் இருந்தது.

21ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய ஆற்றல் வளங்களை உருவாக்குவதிலும், ஆற்றல் மாற்றத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது. எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பெங்களூருவில் பசுமை இயக்க பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை:
இதனைத்தொடர்ந்து மாலையில், தும்குரு மாவட்டம் குப்பி தாலுக்கா பிதரஹள்ளி கிராமத்தில் உள்ள இந்துஸ்தான் ஏரோ (எச்.ஏ.எல்) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை ஆகும்.
* இந்த தொழிற்சாலை 615 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி இங்கு அடிக்கல் நாட்டினார்.
* இந்த தொழிற்சாலையில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுக்குள், ரூ.4 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* முதலில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களும், அதை தொடர்ந்து 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்கள் வரை தயாரிக்க எச்ஏஎல் முடிவு செய்துள்ளது. ஆரம்ப முயற்சியாக, ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
* இந்த தொழிற்சாலையில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள், இந்திய பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் தயாரிக்கப்பட உள்ளன.
* அதிக திறன் படைத்த ஏற்றுமதி செய்யக்கூடிய, சிவில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்வில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். பிரதமருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கோட் பரிசாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து (2)
மோடிஜி அவர்களே , இந்தியாவில் எரிபொருள் விலைகளை எப்பொழுது குறைக்கப்போவதாக உத்தேசம் ???
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இப்படிப்பட்ட செய்திகள் அல்லவா முதல் பக்கத்தில் இருக்கவேண்டும்? மக்கள் இதைப்பற்றி அல்லவா பேசவேண்டும்? ஊடகங்கள் என்ன செய்திறது? வாழ்க பிரதமர் மோடிஜி.