ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சிறுதானிய முக்கியத்துவம் மற்றும் அதனை பயிரிடுவதன் அவசியம் குறித்து பிரசார வாகனம் துவக்க விழா நடந்தது.
வாகனத்தை டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக சிறப்பித்திடும் பொருட்டு கம்பு, திணை, சாமை, வரகு மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானிய பயிர்களின் உற்பத்தியினை அதிகரித்திட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
சிறுதானிய உணவினை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேளை உணவாவது எடுத்துக்கொண்டு நோயற்ற வாழ்வினை வாழ அறிவுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வேளாண் துறை சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது.
2023--24ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று வாகனங்களை கொண்டு 2.2.2023 முதல் 2.3.2023 வரை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.
வேளாண் இணை இயக்குநர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், உதவி இயக்குநர் அன்பழகன், வேளாண் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, வேளாண் அலுவலர் பொன்னுராசன், ஆத்மா திட்ட உதவி மேலாளர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!