Load Image
Advertisement

அன்பு கடிதத்தால் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்: மது குடிப்பதை கைவிட்ட ஏழு தந்தையருக்கு பாராட்டு

Tamil News
ADVERTISEMENT
திருச்சி: அன்பு கடிதம் வாயிலாக தங்கள் மனக்குமுறல்களை எழுதி, தபாலில் அதை தங்கள் வீட்டிற்கே அனுப்பி வைத்து, தந்தையரின் மது மற்றும் புகையிலை பழக்கத்தை கைவிட வைத்த அரசு பள்ளி மாணவ - மாணவியர், 'அன்புக்கு கட்டுப்படாதது இவ்வுலகில் எதுவுமில்லை' என, நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 270க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் மறந்த போன கடிதம் எழுதும் பழக்கத்தை, மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் வகையில், அக்., 9ம் தேதி உலக தபால் தினத்தையொட்டி, இந்த பள்ளி மாணவ - மாணவியர், 250 பேரை, தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் கடிதம் எழுத வைத்துள்ளனர்.

இதற்காக பள்ளி சார்பில், மாணவர்களுக்கு ஒரு, 'இன்லாண்ட்' கடிதம் கொடுக்கப்பட்டது.

கடிதத்தில், மாணவர்கள் தங்கள் பெற்றோர், நண்பர்கள் என, யாருக்கு வேண்டுமானாலும், பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்களை எழுத அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி எழுதப்பட்ட கடிதங்கள், மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அவர்கள் மூலமே தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சில மாணவர்கள் தங்களின் தந்தை மதுகுடிப்பது, புகையிலை போடுவது, அம்மாவுடன் சண்டை போடுவது பிடிக்காது என எழுதியிருந்தனர்.

அந்த கடிதத்தை படித்த ஏழு மாணவ - மாணவியரின் தந்தையர், தங்களின் பல ஆண்டு கால மதுபழக்கத்தையும், பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை போடும் பழக்கத்தையும் கைவிட்டுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன் நடந்த குடியரசு தின விழாவில், மாணவர்களின் கடிதத்தால் மனம் திருந்திய சமுத்திரம், சின்ன சமுத்திரம் கிராமங்களைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கருப்பையா, முருகேசன், சண்முகம், குமார், அழகேசன் மற்றும் எம்.ஜி.ஆர்., ஆகிய ஏழு தந்தையரையும் அழைத்து, சால்வை அணிவித்து, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் கூறியதாவது:

மாணவர்களின் கடிதம் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தி உள்ளது. ஏழு பேர் மது குடிப்பதை, புகையிலை போடுவதை விட்டுள்ளனர்.

இதில், சில மாணவர்களின் கடிதங்கள் படிக்கும் போதே அழுகையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு கடிதம் கிடைத்த தந்தையும் திருந்தி உள்ளார். அப்படி திருந்திய கருப்பையா என்பவரை, பள்ளியில் ஒரு நாள் தேசிய கொடி ஏற்ற வைத்து கவுரவித்தோம்.

மாணவர்களின் கடித தாக்கம், இந்த கிராமத்தில் இன்னும் பலரை மது குடிப்பதில் இருந்து விடுவிக்கும் என நம்புகிறோம். அதற்கு பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையுடன் செயல்படுகிறோம்.

குடிப்பதை கைவிட்டவர்களை, ஒரு மாதத்துக்கு மேல் கண்காணித்தே, அவர்கள் குடியை கைவிட்டதை உறுதி செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை என்பதை, அரசு பள்ளி மாணவ - மாணவியர் நிரூபித்துக் காட்டிஉள்ளனர்.


வாசகர் கருத்து (2)

  • KUMAR. S - GUJARAT ,இந்தியா

    வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement