திக்குமுக்காட வைக்கும் இலவச அறிவிப்புகள்
பெங்களூரு;கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதம் இருந்தாலும் இப்போது முதலே பிரசாரம் சூடுபிடிக்க துவங்கி விட்டது. வாக்காளர்களை கவரும் விதமாக இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சியினர் அறிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மின்சாரம், 2,000 ரூபாய் உதவித் தொகை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.ஜ.த., ஆட்சிக்கு வந்தால், எல்.கே.ஜி.,யில் இருந்து 12-ம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கு இலவச கல்வி, ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக புதிய மருத்துவ திட்டம் கொண்டு வரப்படும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஆளும் பா.ஜ., தயாராகி வருகிறது.
இலவச அறிவிப்புகளை காங்கிரஸ் அறிவித்திருப்பதால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க பா.ஜ.,வும் தயாராகி வருகிறது. இதற்காக, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகள், மாணவர் - மாணவியரை கவரும் விதமாக பல்வேறு இலவச அறிவிப்புகளை முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலவச அறிவிப்புகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தாலும், மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காகவும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும் பட்ஜெட்டிலேயே இலவசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட முதல்வர் பசவராஜ் பொம்மை தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வீட்டுக்கு 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து, அதனை தேர்தலுக்கு முன்பாகவே செயல்படுத்தி, மக்கள் கையில் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதுபோல், விவசாயிகள், மாணவ - மாணவியருக்கு பயன் அளிக்கும் விதமாக புதிய அறிவிப்புகளை அறிவித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க பா.ஜ., தயாராகி வருவதாகவும், இதன் மூலம், பா.ஜ., மீது நல்லெண்ணத்தை மக்களிடம் பதிய வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!