பிரதான ரோடுகளில் பார்க்கிங் குளறுபடி; நிரந்தர தீர்வு அவசியம்
உடுமலை : உடுமலை நகரிலுள்ள பிரதான ரோடுகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பார்க்கிங் இடத்தை வரையறை செய்து, கயிறு அமைக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக முக்கிய பிரச்னையாக உள்ளது.
பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, கச்சேரி வீதி ஆகிய முக்கிய ரோடுகளில், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகளவு உள்ளது.
இதற்கு ரோட்டோரத்தில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களே முக்கிய காரணமாக உள்ளது.
நெடுஞ்சாலையை ஒட்டி, நிறுத்தப்படும் வாகனங்களால், பிற வாகனங்கள் செல்ல போதிய இடமில்லாமல், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கொல்லம்பட்டரை வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதே போல், பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள் நெரிசலில், சிக்க, பை-பாஸ் ரோட்டில், பார்க்கிங் பகுதி வரையறை செய்யப்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது.
கடைகள் முன், இடமிருந்தும், ரோட்டின் அருகில், வாகனங்களை நிறுத்துகின்றனர். முன்பு, ரோட்டுக்கும், கடைகளுக்கும் இடையிலான பகுதியை பார்க்கிங் பகுதியாக வரையறை செய்து போக்குவரத்து போலீசாரால் கயிறு அமைக்கப்பட்டது.
இந்த கயிறை தாண்டி, ரோட்டின் அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, நெரிசல் வெகுவாக தவிர்க்கப்பட்டது.
முக்கிய ரோடுகள் அனைத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பின்னர், 'பார்க்கிங்' இடத்துக்கான கயிறுகள் மாயமாகி, வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துகின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, பிரதான ரோடுகளில், பார்க்கிங் இடத்தை வரையறை செய்ய வேண்டும்; பின்னர் கயிறு அமைத்து, வாகனங்களை நிறுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினால், நெரிசலை வெகுவாக தவிர்க்க முடியும். இது குறித்து, போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மற்றும் கிராம மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!