Load Image
Advertisement

பிளாஸ்டிக் சோதனைக்காக சாவடிகளில் பஸ்களை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை

சென்னை:மலைப் பிரதேசங்களுக்கு பிளாஸ்டிக் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை சோதனை செய்ய, சோதனைச் சாவடிகளில் அரசு பஸ்களை நிறுத்தாவிட்டால், ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகினர்.

நீலகிரியில் 15 இடங் களில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக நடப்பாண்டில் 23 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

அப்போது பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்துவது இல்லை என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சோதனைச் சாவடிகளில் அரசு பஸ்களை நிறுத்தும்படி கலெக்டர் உத்தரவிடவும், பஸ்களை நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்க, நிரந்தர கட்டமைப்பை அமைக்கும் திட்டத்தை இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, கோவை கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 22க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் சார்பில் அதிகாரிகளை நியமிப்பது குறித்து இரு மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கின் விசாரணையை, டிச., 22க்கு தள்ளி வைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement