தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது, இன்று மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைகண்ணன் அறிவிப்பு: காற்றழுத்த தாழ்வுப் பகுதி நெருங்குவதால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில், இன்று அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யும்.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய, 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை
நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை அதி கன மழை பெய்யலாம்.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாளை முதல் 14ம் தேதி வரை கன மற்றும் மிக கன மழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன மழை, அதி கன மழை தொடர்பாக, 24 மணி நேர அடிப்படையில் கடைபிடிக்கப்படும் அளவுகள் குறித்து, வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள விபரம்:மிதமான மழை 2 - 6 செ.மீ.,கன மழை 7 - 11 செ.மீ.,மிக கன மழை 12 - 20 செ.மீ.,அதிகன மழை: 21 செ.மீ.,ருக்கு மேல்
3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததால் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை தமிழகம் - புதுச்சேரி கடற்கரை இடையே அதிகாலை கரையை கடந்த பிறகு அரபிக்கடலை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடக்கும் என்பார் நடக்காது....நடக்காதென்பார் நடந்து விடும்.. கிடைக்கும் என்பார் கிடைக்காது...கிடைக்காதென்பார் கிடைத்து விடும்..... திரைப்படம்:தாயை காத்த தனயன். கவிஞர்:கண்ணதாசன்