ADVERTISEMENT
சென்னை: 'இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது தான் அரசின் நோக்கம் என்றால் கோவில்களுக்கு பதிலாக உயர் கல்வித் துறை வாயிலாக கல்லுாரிகள் ஏன் துவங்கக் கூடாது?' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொளத்துாரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார்; துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலும் கோவில்கள் சார்பில் கல்லுாரிகள் துவங்கப்பட்டன.
இதை எதிர்த்து 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 'தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. கோவில்களை தக்கார் தான் நிர்வகிக்கின்றனர். கல்லுாரிகள் துவங்க கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது' என கூறப்பட்டது.

மனு 2021 நவம்பரில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட நான்கு கல்லுாரிகள் தவிர்த்து கோவில்கள் சார்பில் மேற்கொண்டு கல்லுாரிகள் துவங்கக் கூடாது எனவும் துவங்கப்பட்ட நான்கு கல்லுாரிகளும் வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வழக்கு கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ''மூன்று கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.
''கொளத்துாரில் 46.75 கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 ஏக்கர் அரசு நிலம் அறநிலையத் துறைக்கு ஒதுக்கப்பட்டு 2022 ஜனவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்குள்ள சோமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துடன் இந்த 3.5 ஏக்கரையும் கல்லுாரிக்காக பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றார்.
மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி ''ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்; இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
''மற்ற மதப் பிரிவினரும் அரசு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோருவர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
''மேலும் 15 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்துாரில் கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அங்கு கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து அட்வகேட் ஜெனரலிடம் 'இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது தான் அரசின் நோக்கம் என்றால் கோவில்களுக்கு பதிலாக உயர் கல்வித் துறை வாயிலாக அரசு நிலத்தில் ஏன் கல்லுாரிகள் துவங்கக் கூடாது?
'இதன் பின்னணியில் உள்ள கொள்கை என்ன? நீங்கள் ஏன் இத்தனை வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும்?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விசாரணையை அக்.,28க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
வாசகர் கருத்து (26)
,,,,,
கல்வி அளிப்பது அரசின் கடமை. அதனை ஆலயங்களின் தலையில் கட்டக் கூடாது.. ஆலய உபரி நிதி மதப்பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆலயத்துக்கு😪 சொத்து எழுதி வைத்தவர்கள் பெரியார் நாத்திகபோதனை நடத்தும் கல்லூரிகளை நடத்த ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்.
தாராளமாக... ஐக்கோர்ட் மற்றும் கோர்ட் வளாகங்களிலேயே துவக்கிடலாம்.
கோவிலின் நிதியை திருட வேண்டும் அது மட்டும் தான் அரசின் நோக்கம். இதில் சந்தேகம் என்ன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
,,,,,