தேசப்பற்றை நெஞ்சில் தாங்கி திரண்டது மக்கள் வெள்ளம்!
காலை, 7:30க்கு சுதந்திர தின பவள விழா, மெல்லோட்டம் துவங்கியது. அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத், 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், எஸ்.பி., செஷாங் சாய், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், விஜயகுமார், ஆனந்தன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
விண்ணைப்பிளந்த 'வந்தே மாதரம்'
'ஜாவா' குழுவினரின் 'டூ வீலர்' அணிவகுப்பு; பள்ளி மாணவ, மாணவியரின் 'ஸ்கேட்டிங்' அணிவகுப்பு; தேசியக்கொடியேந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு, ஊர்க்காவல் படையினரின் பேண்டு வாத்திய அணிவகுப்பு; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி.,யினர் அணிவகுப்பு என,'வந்தே மாதரம்...' முழக்கம் விண்ணைப்பிளந்தது.
பேண்டு வாத்தியம் இசைத்த படியும், சிலம்பாட்டம் ஆடியபடியும், கராத்தே சீருடையில் அணிவகுத்தும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வந்தனர். ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் குவிந்தனர்.
தென்னம்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம், மாநகராட்சி அலுவலக சந்திப்பு, பார்க் ரோடு வழியாக, மெல்லோட்டம், நஞ்சப்பா பள்ளியை சென்றடைந்தது. காலை, 7:32க்கு துவங்கிய மெல்லோட்டம், காலை 8:32க்கு பள்ளி வளாகத்தை அடைந்தது.
பறக்க விடப்பட்ட மூவர்ண பலுான்கள்
மெல்லோட்ட பாதையின் இடையே நான்கு இடங்களில், பவள கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் உற்சாகமூட்டுவதாக இருந்தது. நஞ்சப்பா பள்ளியில், கோவை 'புட் லுாஸ்' குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., சுப்பராயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், துணைத்தலைவர் பழனிசாமி, 'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம், திட்ட இயக்குனர் குமார் உள்ளிட்டோர், மூவர்ண பலுான்களை வானில் பறக்கவிட்டனர்.
தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கர், சுதந்திர தினம் குறித்து எழுச்சியுரை நிகழ்த்தினார். தொடர்ந்து, குமரன் கல்லுாரி மாணவியரின் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.மெல்லோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டிருந்தது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள், நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மெல்லோட்டத்தை வாழ்த்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ் வைத்திருந்த பேனரில் பொதுமக்கள் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கவனம் ஈர்த்த நாட்டுப்புற கலைஞர்கள்
பாரம்பரியத்தை போற்றும் விதமாக திருப்பூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலை வடிவில் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர். தென்னம்பாளையம் அருகே அமைந்த மேடையில், வலசுபாளையம், ஆலாம்பாடி, நெய்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த வள்ளி கும்மி குழுவினர் பாரம்பரிய கும்மியாட்டத்தை நிகழ்த்தினர். காட்டன் மார்க்கெட் தபால் நிலையம் அருகே அமைந்த மேடையில், கருமத்தம்பட்டியை சேர்ந்த, சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் வெகுவாக கவர்ந்தது.
காமராஜர் ரோட்டில் அமைந்த மேடையில் கலை இலக்கிய அணி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், 42 பேர் கொண்ட கலைக்குழு, பெருஞ்சலங்கை ஆட்டம், திருப்பூர் குமரன் வரலாற்று பாடல், தீரன் சின்னமலை வரலாற்று பாடல், மண் உழவு இசை, நாட்டு தவில் இசை, கொங்குநாட்டு விருத்த பாடல் நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், காதுக்கும் விருந்தாக அமைந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்த மேடையில், சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் சேர்ந்த, 14 பேர் சுதந்திர தின போராட்ட வீரர்களின் வேஷம் அணிந்தபடி நாட்டியம் நிகழ்த்தினர்.
வாசகர் கருத்து (9)
சிலிர்க்க வைக்கும் பதிவு வந்தே மாதரம் வாழ்க பாரதம்
தினமலர் தேசிய சேவைக்கு தலை வணங்குகிறோம்
கொங்கு நாடு என்றென்றும் தேசத்தின் பக்கம் தான்
திமுகவிற்கு வேறு வழியில்லாமல் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
தேசத்தை விலைக்கு விற்கும் கூட்டம் இதைவிட அதிகம்