Load Image
Advertisement

வழிபாட்டு தலமாக வீட்டை மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் பாஸ்டருக்கு சொந்தமான வீட்டை கிறிஸ்தவ பிரார்த்தனை கூடமாக மாற்ற அனுமதி கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர் பேரூராட்சி, தலக்குளத்தில் பாஸ்டர் மரிய ஆரோக்கியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. இதை கிறிஸ்தவ பிரார்த்தனை கூடமாக மாற்ற அனுமதி கோரி, கன்னியாகுமரி கலெக்டருக்கு மனு செய்தார். கலெக்டர் நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மரிய ஆரோக்கியம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.'மனுதாரரின் கட்டடம், 1996 முதல் பிரார்த்தனை கூடமாக உள்ளது. அனுமதி கோரி, 2009ல் விண்ணப்பிக்கப்பட்டது. இடைப்பட்ட, 13 ஆண்டுகளில் எந்த தரப்பிலிருந்தும் ஆட்சேபனை இல்லை.'சுயமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்காமல், எஸ்.பி.,யின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுத்துள்ளார். மனுவை அனுமதிக்க வேண்டும்' என, மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

'மண்டைக்காடு கலவரம், 1982ல் நடந்ததை தொடர்ந்து, முன்னாள் நீதிபதி பி.வேணுகோபால் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. எந்த ஒரு சர்ச் அல்லது கோவிலை அருகருகே அமைக்க அனுமதிக்கக்கூடாது. சர்ச் அல்லது கோவிலை அமைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்' என, அக்குழு பரிந்துரைத்துள்ளது.'இக்கட்டடத்தை பிரார்த்தனை கூடமாக மாற்ற, 80 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, எஸ்.பி., அறிக்கை உள்ளது. இதை பரிசீலித்த பின் கலெக்டர் நிராகரித்தார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசுத் தரப்பு தெரிவித்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, நீதிபதி பி.வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வழக்கில், 200 மீட்டருக்குள் இரு சர்ச்சுகள், 250 மீட்டருக்குள் ஒரு ஹிந்து கோவில் அமைந்துள்ளன. இதை ஆர்.டி.ஓ.,வின் அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

'குடியிருப்பை பிரார்த்தனை கூடமாக மாற்ற அனுமதித்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எஸ்.பி., அறிக்கை அளித்துள்ளார். அப்பகுதியில், 80 சதவீதம் பேர் மதமாற்றத்தை எதிர்க்கின்றனர். உணர்வுப்பூர்வமான இவ்விவகாரத்தில் கலெக்டரின் உத்தரவில் எவ்வித குறைபாடும், சட்டவிரோதமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, தீர்ப்பளித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement