மதுரை : 'விஸ்வரூபமெடுக்கும் 'டிஜிட்டல்' யுகத்தில் லட்சக்கணக்கான இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். பாடத்திட்டங்களை தாண்டி கூடுதல் திறமைகளை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்து படிக்கும் போதே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என 'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.

கல்லுாரி தேர்வில் கவனம் தேவை
சுப்புராஜ், அட்மிஷன் துறைத் தலைவர், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வை ஆண்டுதோறும் தினமலர் மாணவர்கள், பெற்றோருக்கு கொண்டு சேர்ப்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் ஏராளமான பாடப் பிரிவுகள் உள்ளன. முதலில் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஆறு கல்லுாரிகளை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இ.சி.இ., வரை அனைத்து பாடப் பிரிவுகளுமே வேலைவாய்ப்பு தரக்கூடியவையே. தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின் கடந்தாண்டு எந்த 'கட்ஆப்'க்கு எந்த கல்லுாரி கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்து முன்கூட்டியே தயாராகி கவுன்சிலிங்கில் பங்கேற்க சென்றால் தேவையற்ற குழப்பம் தவிர்க்கப்படும்.
கவுன்சிலிங் நடைமுறை என்ன
கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை:
கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்து தற்போது சான்றிதழ்கள் பதிவேற்றம் முடிந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. 1.7 லட்சம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ளனர். 'கட்ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப 'சாய்ஸ் பில்லிங்' நிரப்ப வேண்டும். அதிக கல்லுாரிகளை 'சாய்ஸ் பில்லிங்'கில் குறிப்பிடுங்கள். மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும். 'லாக்இன்' செய்த பின் மாற்றம் செய்ய முடியாது.
இதையடுத்து தற்காலிக ஒதுக்கீடு விவரம் வெளியிடப்படும். அப்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அலைபேசி, இ மெயிலுக்கு ஓ.டி.பி., எண் வரும். அதை குறிப்பிட்டு 'கன்பர்மேஷன்' செய்ய வேண்டும். இதன் பின்னரே கவுன்சிலிங்கில் பங்கேற்பது உறுதி செய்யப்படும். கல்லுாரிகள், அதன் கோடுகளை தெளிவாக மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய அம்சமாக பாடப் பிரிவை தேர்வு செய்த ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரியில் கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால் அது காலியிடமாக கருதி அடுத்த ரவுண்ட் மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
5 லட்சம் இன்ஜினியர்கள் தேவை
-ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி:
இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் எங்களுடன் இணைந்து 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இம்முறை காலியிடங்களை குறைக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கொரோனா பாதிப்பிற்கு பின் 'டிஜிட்டல் டெக்னாலஜி' அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் 17 -25 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுகின்றனர்.
அடுத்த 6 மாதங்களுக்குள் 3 லட்சம் இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். 'இன்ஜினியரிங் படித்தும் திறன் இல்லை என்ற பிரச்னைக்கு தீர்வாக' பெரும்பாலான கல்லுாரிகள், படிக்கும் போதே நிறுவனங்களுக்கு தேவையான பாடத் திட்டங்களை கற்றுக்கொடுத்து, வேலைத் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கி வருகின்றன.
நவீன தொழில்நுட்பம் தெரிவதால் கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது. சென்டர் ஆப் எக்சலன்ஸி (சி.ஓ.இ.,) மையங்கள் அமைந்துள்ள கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. 5ஜி, 6ஜி தொழில்நுட்பங்களால் 5 லட்சம் இன்ஜினியர்கள் தேவை ஏற்படும்.
விஸ்வரூபமெடுக்கும் 'டிஜிட்டல் யுகம்'
ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்:
எந்தப் பாடப் பிரிவை படித்தாலும் டெக்னாலஜி மிக அவசியம். 2022ல் படித்து, 2026ல் வெளியேறும் போது அப்போது ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது 'சாப்ட்வேர் யுகம்' 'டிஜிட்டல் யுகத்திற்கு' மாறியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், கிளவுட், டிஜிட்டல் டெக்னாலஜி தெரிந்தால் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். பாடங்களை தேர்வு செய்யும் முன் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். படிப்புடன் காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். படிக்கும் போதே ஜப்பானிய, ஜெர்மன் போன்ற அயல்மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
டேட்டா சயின்ஸ், டேட்டா ஸ்கிராபிங், வெப் ஸ்கிராபிங் தொழில்நுட்பங்கள் தெரிந்தால் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் 'லீட் கோட்' தெரிந்தால் கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். கவுன்சிலிங் பங்கேற்பதற்கு முன் 'கட் ஆப்'க்கு ஏற்ப கல்லுாரிகள், பாடப் பிரிவுகளை தேர்வு செய்வதில் சரியான புரிதல் வேண்டும். தரவரிசை வெளியிட்ட பின் கல்லுாரிகள், பாடப் பிரிவுகள் தேர்வு குறித்து பட்டியல் தயாரித்து தயார் நிலையில் கவுன்சிலிங்கிற்கு ஆயத்தமாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.--
வாசகர் கருத்து (7)
A correction. We need ENGINEERS and NOT ENGINEERING GRADUATES. If there is so much of demand, why hundreds of engineering graduates are vrooming in Motor Cycles as Zomato, Swiggy delivery persons. Why a good number of engineering graduates are working as call taxi drivers and call drivers. The reason is staring before your eyes. Lack of knowledge, s, talent, aptitude and attitude. The professional colleges are not producing professionals but only professional graduates.
மாணவர்களே ஒரு பத்தாண்டுக்கு யாரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்காதீர்கள் படித்தால் நிச்சயம் வேலை இல்லை....
ஹா ஹா.. நல்ல காமெடி.
காசுக்காக... மாரடிக்கும்... பத்திரிக்கை.... தர்மம்.... செய்நன்றியில்... விட.....மேலானது....
உணவுக்கு இழைக்கும் விவசாயி பஞ்ச பராரிகள் தேவையில்லை? அப்படித்தானே விவசாயிகளை கண்டுகொள்ளாமல், புறக்கணித்து வாழும் மனித சமூகம் ஒட்டு மொத்தமாக கடைசி விவசாயியை கண்ண்டுபிடிக்க தேடி ஓடி அலையும்.