வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
சிக்கல்
சமூக நீதி பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்காமல், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் விமர்சித்துள்ளன. சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல், உயர் ஜாதி வேட்பாளரை ஆதரிப்பதாக, சமூக ஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒற்றுமை
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக, யஷ்வந்த் சின்ஹா, ஜூன் 30-ம் தேதி, சென்னை வந்தார். அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சின்ஹாவை ஆதரித்து, ஓரிரு வார்த்தைகளோடு முடித்து கொண்டார்.
சின்ஹாவை ஏன் ஆதரிக்கிறோம் என்பதைகூட பேசாமல், தி.மு.க., - எம்.பி., சிவாவிடம் விட்டுவிட்டார். அவரும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் முர்முவை விமர்சிக்காமல், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டவே சின்ஹாவை நிறுத்தியுள்ளோம்' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி உறுதி. அதன்பின், ஏதாவது பிரச்னை, கோரிக்கை என்றால் அவரை தான் சந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாது முர்மு, பழங்குடியின பெண். அவரை எதிர்ப்பது பிற்காலத்தில் வேறு விதமாக பேசப்படும் வாய்ப்புள்ளது.
கண்டிப்பு
எனவே தான், 'சின்ஹாவை ஆதரித்து பேசுங்கள்; ஆனால், திரவுபதி முர்முவை விமர்சித்து, ஒரு வார்த்தையும் பேசக் கூடாது' என, கட்சி நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 'ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் முர்மு' என, தி.மு.க., செய்தித் தொடர்பு இணைச் செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போன்றவர்கள் பேசியதையும் ஸ்டாலின் கண்டித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காணோம்