சிவகங்கைக்கு வந்து சேராத பயணப்படி: குமுறும் போலீசார்
சிவகங்கை--முதல்வர் வருகை, திருவிழா பாதுகாப்பிற்கு வெளி மாவட்டங்களுக்குசென்ற சிவகங்கை போலீசாருக்கு உணவு, பயணப்படி, மிகை பணி சம்பளம் வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடிப்பதாக போலீசார் குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.
உணவு, பயணப்படிஇழுபறி
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்டேஷன் மற்றும் ஆயுதப்படை போலீசார்களை அதிகளவில் வெளி மாவட்ட பாதுகாப்பிற்கு அனுப்பி வைப்பார்கள். அப்படி செல்லும் நாட்களை கணக்கிட்டு இன்ஸ்பெக்டர் முதல் கிரேடு 2 போலீஸ் வரை நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் வழங்கப்படும்.அந்த வகையில் மார்ச்சில் துாத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பிற்கு 2 நாள், பழநி தைப்பூச விழாவிற்கு 3 நாள், மதுரை சித்திரை திருவிழாவிற்கு 9 நாள், சிங்கம்புணரி சமத்துவபுர திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பிற்கென 2 நாட்கள் என தொடர்ந்து இம்மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பி பல மாதங்களை கடந்தும் இவர்களுக்கான உணவுப்படியை மாவட்ட நிர்வாகம் இது வரை வழங்கவில்லை. மேலும் 2021 டிசம்பரில்இருந்தே இம்மாவட்ட போலீசாருக்கு பணி நிமித்தமாக செல்வதற்கான பயணப்படி, மிகை நேர பணி செய்தற்கான சம்பளம் என தொடர்ந்து பல்வேறு நிதிகளை மாவட்ட நிர்வாகம் போலீசாருக்கு வழங்கவில்லை என குமுறலுடன் தெரிவித்தனர்.
ஐ.ஜி., நடவடிக்கைஅவசியம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீசார் கூறுகையில், சிவகங்கைக்கு அருகில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கு அந்தந்த பணி முடிந்து வந்த சில நாட்களிலேயே உணவுப்படி வழங்கி விடுகின்றனர். அதே போன்று பயணப்படி, மிகை பணி நேர சம்பளம் என அனைத்தும் முறைப்படி வழங்கப்படுவதாக அம்மாவட்ட போலீசார் எங்களிடம் தெரிவிக்கின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு மட்டும் உணவு, பயணப்படி உட்பட எதுவும் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே இங்கு பணிபுரிய விருப்பமின்றி பெரும்பாலான போலீசார் மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்துார்போன்ற மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு செல்கின்றனர். மதுரை ஐ.ஜி., அஸ்ராகர்க் போலீசார் நலனில் அக்கறை உள்ளவர். அவர் சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகையை பெற்றுத்தர வேண்டும், என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!