பா.ம.க., சிறப்பு பொதுக் குழு கூட்டம், சென்னை, திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடந்தது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாசுக்கு பூங்கொத்து கொடுத்தார்.
அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த ராமதாஸ், அன்புமணியை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

பா.ம.க., தலைவராக, 25 ஆண்டுகளாக இருக்கும் ஜி.கே.மணிக்கு, 24ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அன்புமணி தலைவராக தேர்ந்தடுக்கப்பட இருப்பதாலேயே, மணிக்கு விடை கொடுக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.
வெற்றி பெறாதது தொண்டர்களின் குற்றம்
இந்த கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தை ஏன் கட்சியை உயர்த்துவதில் காட்டவில்லை? 43 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறேன், இன்னும் அந்த கோலைத்தான் நான் ஏந்தவில்லை. தற்போது மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணியை கோட்டையில் அமரவைக்க இங்கே ஒரு குடும்பமாக நாம் வருகை புரிந்துள்ளோம். 100 வாக்குகள் என்னால் வாங்க முடியும், எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன். சில காக்கைகள் வரும் போகும், ஆனால் உழைப்பவரை உடன் வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அன்புமணிக்கு கூறியுள்ளேன்.
நமக்கு இனி காக்கைகள் வேண்டாம். 2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி; ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை? நம்முடைய கொள்கைகள் போல் நாட்டில் வேறு கட்சிகள் ஏதாவது கொள்கைகளை கொண்டுள்ளதா? இல்லையெனில் ஏன் நம்முடைய பலம் 4லிருந்து 40 ஆக மாறவில்லை? இது யார் குற்றம்? இந்த குற்றத்தை மீண்டும் நீங்கள் செய்யப்போகிறீர்களா? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
தலைவர்கள் வாழ்த்து
பா.ம.க., தலைவராகியுள்ள அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதிமுக கடை வையாபுரிக்கு பாமக கடை அன்புமணிக்கு. பெரிய திராவிட கடை ஏற்கனவே ஒரு குடும்பத்திடம் இருக்கு .வாரிசுகள் வாழ்க