கரூர் மாவட்டத்தில் 3,000 மாணவியர் பள்ளிக்கு ஆப்சென்ட்: கலெக்டர் தகவல்
கரூர்---கரூர் மாவட்டத்தில், 3,000 பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ளனர் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, வி.ஏ.ஓ.,க்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து கூறியதாவது:-'நிமிர்ந்து நில்; துணிந்து சொல்' இயக்கம் மூலம் மாணவியருக்கு, 'வாட்ஸ்- ஆப்' எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் வந்து கொண்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியாகாத பெண் குழந்தைகளுக்கு பிரசவம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக, குழந்தை திருமணங்கள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும், சிசு மரணங்கள் தொடர்கின்றன. அதற்கு காரணம், பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால்தான். அப்படி, 18 வயது நிரம்பாமல் திருமணம் செய்துகொண்டால், குழந்தை பிறக்கும்போது, உடல் எடை, சத்து குறைபாடு ஏற்படும். இதனால், சிசு மரணங்கள் நிகழ்கின்றன. 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரை, நமது மாவட்டத்தில், 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர்.அதில், 3,000 பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தராமல் உள்ளனர். இதுமிகவும் மனவேதனை அளிக்கக்கூடிய செய்தியாகும். இதற்கு காரணம், இளம் வயது திருமணம் தான். சைல்டு லைன் தொலைபேசி எண், '1098' மூலமாகவும் புகாரளிக்கலாம். புகார்கள் ஏதும் வராததால், நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.இனிமேல் வரும் புகார்கள் மீது, கண்டிப்பாக போலீஸ் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.குழந்தை திருமணத்துக்கு காரணமானவர்கள் மீதும், வழக்கு தொடுக்க கூடிய சட்ட உரிமை உள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியானவர் என்பதற்கான சான்று வழங்கிய பின்னரே, திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்யப்படும் என, ஒரு சூழலையும் உருவாக்கியிருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!