Load Image
Advertisement

முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏரி மண் அள்ளியதால் பொக்லைன், டிப்பர் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

ஆத்துார்-முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட திடலை சீரமைக்க, சொக்கநாதபுரம் ஏரியில் மண் அள்ளிச்சென்றதால், பொக்லைன், டிப்பர் லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துாரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும், 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின், மழையை காரணம்காட்டி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அங்குள்ள சொக்கநாதபுரத்தில், 100 ஏக்கரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அங்கிருந்து டிப்பர் லாரி மூலம் மண் அள்ளி, செல்லியம்பாளையத்தில், தி.மு.க., ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்ட பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்காக, 10க்கும் மேற்பட்ட லாரிகள், பொக்லைன் உதவியுடன், மண் அள்ளும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அதிக அளவில் வாகனங்கள் வந்தது குறித்து, வருவாய்த்துறை, போலீசாருக்கு, அப்பகுதி பாசன விவசாயிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வராததால், மக்களே திரண்டு, வாகனங்களை சிறைபிடித்து, மண் அள்ளும் பணியை தடுத்து நிறுத்தினர். ஒரு லாரி மீது கற்கள் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, மல்லியக்கரை போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
அப்போது, 'மண் அள்ளியதை கேட்கவில்லை; லாரியின் கண்ணாடி உடைத்ததை மட்டும் கேட்க வந்துவிட்டீர்கள். பகலில் மண் அள்ள அனுமதித்ததாக கூறினர். ஆனால், இரவு, பகலாக, தினமும், 50க்கும் மேற்பட்ட செம்மண், 'லோடு' ஏற்றிச்செல்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இந்த, 'வீடியோ' காட்சிகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து, ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் கூறுகையில், ''ஏரியில் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு சென்ற வருவாய்த்துறையினர், மண் அள்ளும் பணியை தடுத்து வாகனங்களை வெளியேற்றினர். லாரி கண்ணாடி உடைத்தது குறித்து புகார் எதுவும் இல்லை. அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளக்கூடாது என எச்சரித்துள்ளோம்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement