கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (டிச.,15) காலை திடீரென சோதனையிட்டு வருகின்றனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உட்பட 9 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 2 இடங்களில் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடக்கிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்த தொழிலும் செய்யாத நிலையில் தங்கமணி மனைவி வருமான வரி கட்டியது எப்படி எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
சேலம் குரங்குசாவடி பகுதியில் வசிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பரும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையத்தில், தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த தொண்டர்கள் அங்கு குவிந்தனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொய் வழக்கு போடுவதாக குற்றஞ்சாட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகபடுத்தப்பட்டுள்ளது.
வேலுமணி சந்திப்பு
நாமக்கல்லில், தங்கமணியை முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சோதனை நடக்கும் இடங்கள்
*நாமக்கல் ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீடு
*கரூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினர் வசந்தி வீடு
*வேலூர் காட்பாடி அருகே உள்ள செங்குட்டையில் உள்ள உறவினர் வீடு
*சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணி மகன் தரணிதரன் வீடு
*சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள ஓட்டல் மற்றும் உரிமையாளர் வீடு
*சென்னை நுங்கம்பாக்கம், மதுரவாயலில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடக்கிறது.
கண்டனம்
இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடக்கிறது. அதிமுக செல்வாக்கு வளர்வதை கண்டு பொறுக்க முடியாத திமுக அரசு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. அதிமுக.,வுடன் நேரடியாக மோத முடியாமல், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனையை திமுக அரசு நடத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு,கடத்தல்,பாலியல் எந்த குற்றம் ஆகினும் செய்திருப்பவன் , செய்து கொண்டிருப்பவன், செய்ய இருப்பவன் எவனும் சிறையில் இருக்கப்போறது இல்லை. நாம்தான் படிச்சிட்டு மாங்கு மாங்குன்னு கருத்தைப் பதிவு செய்து காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.