ADVERTISEMENT
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மாறி மாறி நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள், அரசு திட்டங்களுக்கு தங்களது தலைவர் பெயரை வைத்து பெருமிதம் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், 650 'அம்மா' உணவகங்களுடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் மேலும், 500 உணவகங்களை துவங்கப் போவதாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
ஒரு உணவகம் நடத்த, மாதந்தோறும், 3.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இனி புதிதாக துவக்கவிருக்கும், 'கலைஞர்' உணவகங்களையும் சேர்த்து நடத்த, மாதம், 40 கோடி ரூபாய் தேவைப்படும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, 100 சதவீத நிதி உதவி வழங்கினால் தான் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என, கோரிக்கை வைத்திருக்கிறார் அமைச்சர்.

இதில், இரண்டு உள்நோக்கம் இருப்பது நன்றாக தெரிகிறது. ஒன்று, மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டத்தால், தி.மு.க., அரசு மக்களிடையே நல்ல பெயரை
தட்டிச் செல்லலாம். இரண்டாவது, 'அம்மா' உணவகத்தை, 'கலைஞர்' பெருமையை பறைசாற்றும் பாசறையாக படிப்படியாக மாற்றி விடலாம்.
ஏற்கனவே, 'அந்தியோதயா அன்னயோஜனா' திட்டத்தின் மூலம், நாட்டிலுள்ள ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வருகிறது, மத்திய அரசு. 'நவோதயா' பள்ளி உட்பட, மத்திய அரசு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும், தி.மு.க., வரிந்து கட்டி எதிர்க்கும்.
இத்திட்டத்திற்கு மட்டும் முழு செலவையும் மத்திய அரசிடம் கோருவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் திட்டங்களுக்கு, ஆட்சியாளர்கள் தங்கள் தலைவரின் பெயரை சூட்டி கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
ஆட்சி மாறும்போது, அந்த பெயர்கள் துாக்கி எறியப்பட்டு, புதிய நாம கரணம் செய்யப்படுவது நடைமுறையாகி விட்டது. உணவகத்திற்கு, மருத்துவ சேவைக்கு, தங்கள் தலைவர் பெயரை சூட்ட அடித்து கொள்ளும் திராவிடக் கட்சிகள், தமிழக அரசுக்கு வருவாய் அள்ளித் தரும் மது கடைகளுக்கு மட்டும் ஏன், 'கலைஞர் டாஸ்மாக்' என பெயர் சூட்டக் கூடாது?
மத்திய அரசிடம் இருந்து 100 சதவீதம் நிதியை வாங்கிக்கொண்டு அந்தத் திட்டத்திற்குக் கருணாநிதியின் பெயரை வைப்பார்களாம். இதைத்தான் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை என்பார்கள். சரியான ஸ்டிக்கர் அரசு..