தமிழக நிகழ்வுகள்
அணையில் மூழ்கிய வாலிபர்
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர் தைக்காபட்டி தெருவை சேர்ந்தவர் முருகன் 45. நண்பர்கள் 5 பேருடன் நேற்று மதியம் பிளவக்கல் பெரியாறு அணையில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:00 மணிக்கு தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. உடன் வந்த நண்பர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் தேடுகின்றனர்.
பரோட்டா சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு
சென்னை: கொளத்துாரை சேர்ந்தவர் சங்கமித்ரன், 17; கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர். இரவு கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின் துாங்கிய சங்கமித்ரனுக்கு நேற்று அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவரை தாக்கிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்
சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவரை, இயற்பியல் ஆசிரியர் சுப்ரமணியன் காலால் உதைக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. போலீசில் மாணவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சுப்ரமணியன் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இதையடுத்து, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அவிநாசி அருகே விபத்து: மருத்துவ மாணவர் பலி
அவிநாசி:அவிநாசி அருகே நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர் பலியானார். கேரள மாநிலம் பாலக்காடு கடம்பழிபுரத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் 63. இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் இர்ஷத் அகமது 25. மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவர்.கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காட்டுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலுாரில் ஆறு வழி சாலையில் இர்ஷத் அகமது ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இழுத்து சென்று தடுப்பில் மோதியது.அதில் இரும்பு கம்பியில் தலை மோதி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காதலை கண்டித்தவர் குத்திக் கொலை
தாண்டிக்குடி : தாண்டிக்குடி அருகே பூலத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் மணிமாறன் 24. அதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுரேந்திரன் 22. மணிமாறனின் மனைவியின் தங்கையை காதலித்துள்ளார். இதை மணிமாறன் பலமுறை கண்டித்துள்ளார்.நேற்று ஊர் திருவிழாவின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேந்திரன், தன்னை கண்டித்த மணிமாறனை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பினார். அவரை தாண்டிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
டூ - வீலர் மோதி விபத்து: 2 வயது குழந்தை பலி
பனையூர்- -சென்னை, பாலவாக்கம், அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் சாது, 26; இவரது மனைவி நந்தினி, 22. இவர்களது இரண்டு வயது ஆண் குழந்தை தட்சன்.நேற்று முன் தினம் இரவு, மூவரும் 'பைக்'கில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கானத்துார் சென்று கொண்டிருந்தனர். பனையூர் அருகே, பின்புறம் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாது ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.இந்த விபத்தில், சாது உள்ளிட்ட மூவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மூவரும், ஆம்புலன்ஸ் வாயிலாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய நிகழ்வுகள்
டிராக்டர் விபத்து 11 பேர் பலி
ஜான்சி:உ.பி.யில் எரக் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல மத்திய பிரதேசத்தில் இருந்து 30 பேர் டிராக்டருடன் இணைந்த டிராலியியில் வந்தனர்.சிர்கான் பகுதியில் டிராக்டர் வந்தபோது சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்ப டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 4 குழந்தைகள், ஏழு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்தனர்.
பக்தர்கள் மீது கார் மோதல் சத்தீஸ்கரில் ஒருவர் பலி
ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் சாலை ஓரமாக நடந்து சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் நகரில் நேற்று துர்கா சிலையை ஆற்றில் கரைப்பதற்காக ஏராளமான பக்தர்கள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது படுவேகமாக வந்த ஒரு கார் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். 20 பேர் காயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இந்த விபத்து தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கழிப்பறையில் பிறந்து இறந்த சிசு உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்
கான்பூர்:உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறையில் பிரசவம் ஆன குழந்தை, கழிப்பறைத் தொட்டியின் குழிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
உத்தர பிரதேசத்தின் கான்பூர், லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனைக்கு ஹசீன் பானு, 30, என்ற கர்ப்பிணியும், அவரது கணவரும் 13ம் தேதி இரவு வந்தனர். அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், பிரசவ வார்டில் அனுமதிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். மனைவி கதறித் துடிப்பதை பார்த்து அவரது கணவர் மொயின், டாக்டர்களிடம் மன்றாடினார். டாக்டர்கள் இரக்கம் காட்டவில்லை.
வலியில் துடித்த ஹசீன் பானு அங்கிருந்த கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவம் ஆன குழந்தையை கையில் பிடிப்பதற்குள் கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து விட்டது.
அதில் இருந்த கழிவுகள் செல்லும் துளையில் குழந்தையின் தலை சிக்கியது. தகவல் அறிந்து மருத்துவமனை ஊழியர்கள் வந்து, குழந்தையை மீட்க முயற்சித்தனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின் கழிப்பறை தொட்டியை உடைத்து குழந்தையை எடுத்தனர். ஆனால் அந்த குழந்தை உயிரிழந்து விட்டது.
இது குறித்து மொயின் கூறியதாவது:என் மனைவியை பிரசவ வார்டில் சேர்க்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். வலி தாங்க முடியாமல் தான், சிறுநீர் கழித்தால் வலி குறையும் என நம்பி கழிப்பறைக்கு சென்றார். ஆனால் என் குழந்தையை இழந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக நிகழ்வுகள்
பிரிட்டன் எம்.பி.,கத்தியால் குத்திக் கொலை
லண்டன் :பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.
இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கனில் 37 பேர் பலி
காந்தஹார்:ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 37க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காந்தகாரில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நான்கு பேர் அங்கு வந்தனர். இருவர் மசூதியின் வாயிலில் நின்றனர். மற்ற இருவர், தொழுகையில் ஈடுபட்டிருந்த கூட்டத்துக்குள் புகுந்தனர்.
அடுத்த நிமிடம் அந்த நான்கு பேரும், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 37க்கும் அதிகமானோர் இறந்தனர். 70 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
'கோவில்களை சூறையாடியோருக்கு தண்டனை'
டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்து கோவில்கள் மத வெறியர்களால் சூறையாடப்பட்டன.
துர்கா பூஜையை சீர்குலைக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், போலீசாருக்கும், வன்முறைக் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகமுள்ள 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!