ADVERTISEMENT
ஊத்துக்கோட்டை--பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, புழல் நீர்த்தேக்கம் மற்றும் சோழவரம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி 14ம் தேதி, கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு சாய்கங்கை கால்வாய் வழியே கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் 1,000 கன அடி திறக்கப்பட்டது.சாய்கங்கை கால்வாயில் 152 கி.மீட்டர் பயணித்து, 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது. அன்று மாலை, 4:45 மணிக்கு பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது.கண்டலேறு அணையில் இருந்து, தற்போது 2,100 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு 398 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 280 கன அடி நீர் செல்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, இணைப்புக் கால்வாய் மூலம் வினாடிக்கு 160 கன அடி புழல் நீர்த்தேக்கத்திற்கு, பேபி கால்வாய் மூலம் 69 கன அடி, சோழவரம் ஏரிக்கு என, மொத்தம் 229 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!