ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர், 51வது பட்டத்துக்கு காலியாக உள்ள பதவிக்கு நியமனம் செய்ய, ஹிந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரியாக பதவி வகிப்பவரான, செ.மாரிமுத்து, கடந்த வார இறுதியில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையானது, ஸ்ரீரங்கம் ரங்க நாராயண மடம். வைணவத்தை வாழ்வித்த ஸ்ரீ ராமானுஜரால் உருவாக்கப்பட்ட மடம் இது. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலும், அருட்பணியிலும், இந்த மடத்தின் ஜீயர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், 50வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018 ஜூலை 11ல் காலமானார். மூன்று ஆண்டுகளாக, இந்த மடத்துக்கு, அடுத்த ஜீயர் எவரும் தேர்வு பெறவில்லை. இந்நிலையில் தான், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

போராட்டம்
'ஒரு சமயத்தின் உள்விவகாரங்களில், அரசு தலையிடக்கூடாது. அதன் வேலையல்ல அது' என, பக்தர்கள் கூறுகின்றனர்.
மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கூறியதாவது:
ஜீயர் பதவி, அரசு பதவியை நிரப்புவது போன்றது அல்ல. ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் அட்டகாசங்களை தாங்க முடியவில்லை. கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும். இப்போது, ஸ்ரீரங்கம் ஜீயரையும் தேர்வு செய்கிறேன் என, அறநிலைய துறை கிளம்பி இருப்பது, அவமானமாக இருக்கிறது. இது வைணவ சம்பிரதாயமில்லை. விளம்பரம் கொடுத்தது, மகா தப்பு. ஜீயரை தேர்வு செய்வதற்கு, அந்த மடத்தின் சிஷ்யர்கள் உள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வர். அரசு தலையிடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:
மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. மதம் சாராத, ஆன்மிகம் சாராத நிர்வாக விஷயங்களில் தான், அரசு தலையிட முடியும் என்பது தான் சட்டம். ஜீயரை அமர்த்துவது, 100 சதவீதம் ஆன்மிகம் தொடர்பானது. இதில், பாரம்பரியத்தையும், மரபையும் மீறி, ஆன்மிக விரோதமாக தலையிடுகிறது தமிழக அரசு. இன்றைக்கு இதை அனுமதித்தால், நாளைக்கு ஒவ்வொரு மடாதிபதி நியமனத்திலும், அரசு தலையிட தொடங்கி விடும். ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்ரீரங்கத்தில், 'அரங்கனைக் காப்போம்' என்று ஒரு போராட்டம் நடத்தினேன். மடங்களின் சொத்துக்களை, தி.மு.க.,வினர் அபகரித்திருக்கின்றனர். இப்போது, அவர்களே மடாதிபதியாக அமர்ந்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அரசு இந்த முயற்சியை, உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர், டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
மடத்தின் நிர்வாகத்தில், அறநிலைய துறை இணை ஆணையர், செயல் அலுவலர் தலையிடவே முடியாது. இதற்கு இரண்டு தீர்ப்புகள் உள்ளன. ஷிரூர் மடத் தீர்ப்பு மற்றும் திருவாவடுதுறை ஆதின இளவலை நியமிக்கும் விஷயத்தில், சென்னை டிவிஷன் அமர்வு அளித்த தீர்ப்பும் முக்கியமானவை. மேலும், நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்செந்துார் உள்ளிட்ட, 50 கோவில்களின் நிர்வாகத்தை அறநிலைய துறை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், 1927ல் உருவாக்கப்பட்ட ஹிந்து சமய வாரியம் காலாவதியாகி, சுதந்திரத்திற்கு பின், அறநிலைய துறை உருவாக்கப்பட்டது.
சட்ட விரோதம்
இந்த,50 கோவில்கள் தொடர்பான அறிவிக்கைகளை நீட்டிக்கும் சட்டப் பிரிவுகள், 63 முதல், 69 வரை செல்லாதவை என்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது; அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னும், அரசு இக்கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருவது, சட்ட விரோதமானது. ஸ்ரீரங்கம் கோவில், 1938 முதல் செயல் அலுவலர் வாயிலாக, நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது என்றும், ஆனால், அதற்கான உத்தரவு எதுவும் அலுவலகத்தில் இல்லை என்றும், அறநிலைய துறை தெரிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்துக்கே அதிகாரம் இல்லாத போது, இவர்கள் எப்படி மடத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியும்?பொதுவாக ஒரு ஜீயர், தன் அடுத்த பட்டத்தை நியமிக்காமல் காலமாகி விடும் போது, அந்த சம்பிரதாயத்தை சேர்ந்த நன்கு கற்றறிந்த ஸ்தலத்தார், அடுத்த ஜீயரை நியமிப்பது தான் நடைமுறை. அதை, ஒரு இ.ஓ., செய்ய முடியாது. ஏதோ டைபிஸ்ட், அலுவலக உதவியாளரை தேர்வு செய்வது மாதிரி விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.
ஹிந்து சமய அறநிலைய துறை சட்டம், 56(1)வது பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை வேறு எடுக்க முடியும் என்று தெரிவித்து இருப்பது தான், உச்சபட்ச சோகம். ஒரு ஜீயரை, இவர்கள் ஊழியர் மாதிரி கருதுகின்றனர். அது ஒரு சம்பிரதாயத்தின் ஆன்மிக தொடர்ச்சி என்றுகூட தெரியவில்லை.கடந்த, 29 ஆண்டுகளுக்கு முன், இதற்கு முன்னர் இருந்த ஜீயரை, இதே முறைப்படி நியமனம் செய்ததாக சொல்கின்றனர்.அதுவும் சட்டவிரோதமானது தான்.
அதை யாரும் கேள்வி கேட்காதது, துரதிருஷ்டவசமானது. அதே தவறு, இந்த புதிய ஆட்சியிலும் நடந்துவிடக் கூடாது. இவ்வாறு ரமேஷ் கூறினார். இந்த விவகாரத்தில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் தமிழக முதல்வர் தலையிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, திரும்ப பெறச் செய்ய வேண்டும்.ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.- நமது நிருபர் -
வாசகர் கருத்து (281)
மக்களாட்சி நாட்டில் அனைத்துமே அரசுக்கு கட்டுப்பட்டது என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒரு இந்துக்கோவிலில் ஜீயராக இருக்க கண்டிப்பாக அவர் ஒரு இந்துவாக இருக்கவேண்டும். இந்து கடவுள்கள் மீது முழு நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும். மற்றபடி காலம் காலமாக இருக்கும் வழக்கங்கள் இப்போது இருக்க வேண்டும் என்பது இல்லை. எத்தனையோ ஆகம விதிகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. கோவில்களின் இருந்த நாதஸ்வர இசை இப்போது மின்சாரத்தில் இயக்கப்படுகிறது போன்ற எத்தனையோ மாற்றங்கள். கொரோனா வைக் காரணம் காட்டி காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எத்தனையோ ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன இல்லை இல்லை மாற்றப்பட்டுள்ளன. அரசு கண்டிப்பாக ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவரைத்தான் அரசு தேர்வு செய்யும் என்பது கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இதற்க்கு எதற்க்காக எதிர்ப்பு இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. அனைத்துத் தொழிலையும் அனைவரும் செய்வது என்பது இப்போது நடைமுறையாகிப் போய்விட்டது. என்கிறபோது கோவிலின் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உள்ளது என்பதை மறுக்க முடியாது... கூடாது. பெரும்பாலான இந்துக்கள் அரசின் இந்த முடிவை பாராட்டவே செய்வார்கள். ஏனென்றால் கடவுளை மதத்தில் இருக்கின்ற ஒரு பிரிவினர் மட்டுமே உரிமை கொண்டாடுவது சரியானது அல்ல. அரசின் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டால் இந்துக்கள் ஒற்றுமை என்பது இன்னும் பலப்படும். எதிர்ப்பது என்பது மற்ற இந்துக்களோடு இணைந்து வாழ்வதற்கான மனப் போக்கு இல்லாத நிலையைக் காட்டுவதாகவே இருக்கும். அந்த விளம்பரம் கூட "ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர், 51வது பட்டத்துக்கு காலியாக உள்ள பதவிக்கு நியமனம் செய்ய, ஹிந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்றுதான் உள்ளது. அனைத்து இந்து மதத்து சமுதாயத்தினரும் அல்ல. கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரியாக பதவி வகிப்பவர் பெயரில் விளம்பரம் செய்ததுதான் பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அவர் கூட இந்துதான். அரசால் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரியோடு கலந்து ஆலோசிப்பதில் இருக்கின்ற மன சுருக்கம்தான், இந்து மதத்தையே, மதத்தினரையே புண்படுத்துவதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
அமைச்சரிடம், ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சூடு சுரணை இல்லாமல் ஹிந்துக்கள் திமுகவிற்கு ஒட்டு போட்டார்கள். இன்னும் ஐந்து வருடங்களுக்கு சூடு சுரணை இல்லாமல் வாழ பழகி கொள்ளவேண்டும்.
இந்து சம்பிரதாயம் தானே இதை எல்லாம் எவனும் மதிக்க மாட்டான் ஆனா கிறித்துவ முஸ்லீம் என்றால் பரிந்து வரும் இதே கேனையன் கூட்டம்
அந்த மடத்தை சேர்ந்தவர்கலே அதன் தலைவரே தேர்ந்து எடுப்பது பொருத்தமாகும்