'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், மத பிரசார நிகழ்ச்சிகளை நடத்துபவர், மத போதகர் பால் தினகரன். அவர், கோவை, நல்லுார்வயல் கிராமத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை, பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார். கடந்த மாதம், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அதில், பல கோடி ரூபாய் வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. நல்லுார்வயல் என்ற கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என, மாற்றிய தாகவும் புகார் எழுந்தது. கிராம மக்கள் 'நல்லுார் வயல் பாதுகாப்பு குழு' என்ற அமைப்பை துவக்கி, கண்டன பேரணி நடத்தினர். மத்வராயபுரம் ஊராட்சியில், நல்லுார்வயல் என, பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழங்குடியினருக்கு பரிசு பொருள்
தற்போது, காருண்யா 'சீஷா' நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாயிலாக, பழங்குடியினருக்கு பரிசு பொருட்களை கொடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆலாந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது:கடந்த, டிச., மாதம் பழங்குடியினர் கிராமங்களில், காருண்யா சீஷா நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் நின்றிருப்பதாக தகவல் கிடைத்தது. நானும், கிராமத்தினரும் சென்று, வெள்ளப்பதியில் நின்றிருந்த சீஷா ஆம்புலன்ஸ்சை மறித்தோம்.ஆம்புலன்சில் வந்தவர்களிடம் விசாரித்த போது, 'பொருட்களை கொண்டு வந்தோம்' என்றனர்.
பின்னர், வீட்டில் உள்ளவர்களை பார்க்க வந்ததாகவும், கிரக பிரவேசத்துக்கு வந்ததாகவும் கூறினர். முன்னுக்கு பின், முரணாக பேசியதால், அப்போதைய போளுவாம்பட்டி வனச்சரகரான ஆரோக்கியசாமிக்கு தகவல் தெரிவித்தேன்.வனத்துறை ஊழியர்கள் வந்து விசாரித்துவிட்டு, அனுமதியில்லாமல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
பழங்குடியினர் வீட்டில், காருண்யா சீஷா ஆம்புலன்சில் கொண்டு வந்த, புத்தாடைகள், பெட் ஷீட், குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள், பேனர் இருந்தன. இது, முழுக்க முழுக்க பழங்குடியினரை மதமாற்றம் செய்யும் முயற்சியே.இது குறித்து, வனத்துறை, காவல் துறை, மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தேன்.
மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து, சுகாதாரத் துறையினருக்கும் புகார் அளித்தேன். இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதே நிலை நீடித்தால், காருண்யா நிர்வாகத்தினரால், பழங்குடியினர் மதமாற்றம் செய்யப்படுவது உறுதி. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பசுமை வீடுகளில்பால் தினகரன் பெயர்
கடந்த ஆண்டு, நல்லுார்வயல்பதி பழங்குடியினர் கிராமத்தில், அரசு சார்பில், ஏழு பசுமை வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் கட்டுவதற்கு, 'காருண்யா சீஷா' சார்பில், ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்ட அரசின் பசுமை வீடுகளில், 'பால் தினகரன் சீஷா காருண்யா சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் உதவியோடு தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு' என்ற பெயர் பலகையை பொருத்தியுள்ளனர்.
அதை, பால் தினகரனின் பிறந்தநாளில் திறக்க முடிவு செய்தனர். நல்லுார்வயல் மக்களின் எதிர்ப்பு காரணமாக, பெயர் பலகை சுவரில் இருந்து அகற்றப்பட்டது.
தானும் படுக்கமாட்டான் அடுத்தவனியும் படுக்கவிடமாட்டான் அப்படி பட்ட ஆள் போல ஆலாந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் அவருக்கு கிடைக்கவேண்டிய கமிஷன் கிடைக்கவில்லை போல