ரஜினி நமக்கு வேண்டும்; உயிர் வாழ விடுங்கள்
இதில் ஒரு உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும், மற்ற உறுப்புகளில் தாக்கம் இருக்கும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது இதயத்தை தாக்குகிறது. நாம் உண்ணும் உணவு, இரைப்பையில் செரிவடைந்து, குளூக்கோஸ், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், சோடியம், பொட்டாசியம், கார்பனேட், வைட்டமின்களாக ரத்தத்தில் கலந்து விடுகிறது உடலில் உள்ள திசுக்களுக்கு இந்த சத்துக்கள் சென்று, மெட்டபாலிசம் என்ற ஜீவ பரிமாண சக்தியையும் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது. ரத்தத்திலுள்ள கழிவுகளையும், நச்சுகளையும் சிறுநீரகம் வடிகட்டி, வெளியேற்றி விடுகிறது. சிறுநீரகம், அவரைக்கொட்டை போன்ற உருவம் கொண்டது. பத்து செ.மீ., அளவுக்கு வயிற்றுப் பகுதியில் இருக்கும். சிறுநீரகத்தின் முக்கிய உயிர் நாடி, நெப்ரான் என்றழைக்கப்படுகிறது. இதன் குழாய், தேனீர் கோப்பை போன்ற வடிவத்தில் வளைந்து காணப்படும். இதிலிருந்து, இரண்டு செ.மீ., நீளமுள்ள குழாய்கள், சிறுநீரகப் பையில் சேர்கின்றன.
சிறுநீரகம் சிதைகிறது
இந்த நெப்ரான்கள், 10 லட்சத்திற்கும் மேல் சிறுநீரகத்தின் உள்ளே தென்படுகின்றன. இந்த சிறிய ரத்தக் குழாய்கள், கொத்து கொத்தாக படர்ந்திருக்கும். இந்த ரத்த குழாய்களால், ரத்தத்தில் உள்ள ஒரு நானோ கிராம் சற்றே அதிகமாக இருக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டணுக்களை வெளியேற்ற முடியாது. காரணம், இவற்றில் உள்ள துவாரம், ஒரு நானோ கிராம் அளவுக்கு தான் இருக்கும். இதன் மூலம், குளூக்கோஸ் மற்றும் தாது பொருட்கள் வெளியேறி, கீழேயுள்ள குழாய்களில் கிரகிக்கப்படுகிறது. மீதி, சிறுநீரகப் பையில் வந்து வெளியேறுகிறது.சிறுநீரகத்தை பாதிக்கும் நோய்களில் முக்கியமானவை, சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, காரணம் அறியாத சிறுநீரக வியாதி. முக்கியமானது சர்க்கரை வியாதி. இது உடலில் நீண்டகாலமாக, மவுனமாக பாதிப்பை ஏற்படுத்தி, எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது. சர்க்கரை வியாதியால், கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, வடிகட்டும் வேலை தடைபடுகிறது. சிறுநீரகம் சிதைகிறது. இந்த சிதைவால், சிறுநீரகத்தில் ரெனின் என்ற வேதிப் பொருள் வெளியாகி, ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இந்த உயர் ரத்த அழுத்தத்தால், இதய வீக்கம் ஏற்படுகிறது அல்லது இதயம் செயலிழக்கிறது அல்லது மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் சம்பவிக்கிறது.
சிறுநீரகத்தின் பரிசோதனைகள்:
*சிறுநீர் ஆல்புமின் என்ற வெண் புரதம் அளவைக் கண்டறிதல்.
* கிரியாட்டின் அளவைக் கண்டறிதல்.
* ஜி.எப்.ஆர்., என்ற பரிசோதனை.
நலிவடைந்த சிறுநீரகத்தை சரி செய்ய, உணவில் உப்பு மற்றும் புரதம், பொட்டாசியம் என்ற தாதுப் பொருட்களை குறைத்து அளவாக உட்கொள்ள வேண்டும்.இவை சிறுநீரகத்திற்கு ஊறு விளைவிக்கும்.நலிவடைந்த சிறுநீரகத்தில் பாஸ்பரஸ் என்ற தாதுப்பொருள் அதிகமாகிறது. காரணம், நலிவடைந்த சிறுநீரகத்தால் இதை வடிகட்டி வெளியேற்ற முடியாது. இதனால் இது ரத்தத்தில் அதிகமாகிறது. இந்த பாஸ்பரஸ், கால்சியத்துடன் இணைகிறது. இதனால் கால்சியம் குறைகிறது. இந்தக் குறைபாட்டை சரி செய்ய கால்சியம், வைட்டமின் டி3 இரண்டும் தேவைப்படுகின்றன. சிறுநீரகம், எரித்ரோபோய்ட்டின் என்ற உசுப்பு நீரை சுரக்கிறது. இதன் வேலை, எலும்பு மஜ்ஜையில் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது. நோயுள்ள சிறுநீரகத்தில், எரித்ரோபோய்ட்டின் குறைந்து அனீமியா என்ற ரத்தசோகை உண்டாகிறது. வாழ்நாள் முழுக்க, மைக்ரோ நொடி கூட பிசகாமல் வேலை செய்யும் சிறுநீரகம், வடிகட்டும் வேலையை நிறுத்தி விட்டால், உயிர் வாழ்வது கடினம். மரணம் ஏற்படும். மரணத்தை தடுக்க டயாலிசிஸ் செய்ய வேண்டும்.



டயாலிசிஸ் எப்போது?
பழுதடைந்த சிறுநீரகத்தின் வேலையை செய்வதற்கு, 'டயாலிசிஸ்' என்ற கருவியை உடலுக்கு வெளியே வைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி திரும்பவும், ரத்தத்திற்குள் செலுத்தி உயிர் காக்கப்படும். இரண்டு வகை டயாலிசிஸ் உண்டு. பெரிடோனியல் மற்றும் ஹீமோ டையாலிசிஸ்டயாலிசிஸ், வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு ஒரு நாளுக்கு, 10 ஆயிரம் ரூபாய். இது ஒரு தற்காலிகமான உயிர்காக்கும் சிகிச்சை தான். இதனால், உயிரை எந்தவித ஊடுருவல் சிகிச்சையுமின்றி காப்பாற்றலாம்; முக்கியமான இறுதி தீர்வு, சிறுநீரக மாற்று சிகிச்சை தான். நீண்ட நாள் சர்க்கரை வியாதியை, தகுந்த மருந்தால், கட்டுப்படுத்தா விட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது.கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தத்திற்கு சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில், சிறுநீரகம் பழுது அடையும்.இவை தான், இரண்டு முக்கிய காரணங்கள். சிறுநீரக தானம் பெற்று வாழ்வது, எளிதான காரியம் அல்ல.தானம் பெற்றவரின் உடல், மாற்று சிறுநீரகத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம். இதைத் தடுக்க, மிகவும் விலை உயர்ந்த, சைக்ளோஸ்போரின் என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதற்குப் பக்க விளைவுகள் அதிகம். அதைச் சகிக்க வேண்டும். மேலும், தானம் பெற்ற சிறுநீரகத்திற்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். எந்த நேரத்தில், எப்படிப்பட்ட நோய் வரும் என்று கூற இயலாது. இதற்கு மருத்துவர் கண்காணிப்பு அவசியம். 20 வயது முதல், 50 வயது உள்ளவர்களுக்கு, சிறுநீரக மாற்று சிகிச்சை, நல்ல பலனைக் கொடுக்கும். காரணம், இந்த வயதில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எந்தவித குறைபாடும், நோயும் இருக்காது. வயதானோருக்கு, அதாவது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மாற்று சிகிச்சை செய்யும் முன், அவர்களை துல்லியமாகப் பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய வீக்கம், சில உறுப்புகள் செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கலாம்.
அரசியல் உளைச்சல்
எல்லாமே சீராக இருந்தால், சிறுநீரக மாற்று சிகிச்சை சாத்தியம்.அதுவும், சிறுநீரக தானம் வழங்கியவர்கள் இளம் வயதினராக, நெருங்கிய உறவினராக இருப்பது சிறந்தது. முதியோருக்கு, இள வயதினரின் சிறுநீரகம் பொருத்துவது சரியானதாக இருக்கும். அப்படிச் செய்தாலுமே, மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியம்.மாற்று சிறுநீரக சிகிச்சை பெற்ற, இரண்டு வி.ஐ.பி.,க்களில் ஒருவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர், முன்னாள் கவர்னர் டாக்டர் சென்னா ரெட்டி. இருவருக்குமே, 65 வயதுக்கு மேற்பட்டே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் கொடுத்தவர், அவருடைய அண்ணன் மகள். இவருக்கு, தினமும் 24 மணி நேரமும், டாக்டர்கள் குழு, இவர் வீட்டிலும், அலுவலகத்திலும் தங்கி கண்காணித்து வந்தனர். சர்க்கரை நோயால் கடும் பாதிப்படைந்து இவர் சிறுநீரகம் செயலிழந்தது.
சர்க்கரை நோய் ஏற்பட்டதற்குக் காரணம், அரசியல் உளைச்சல்.டாக்டர் சென்னா ரெட்டிக்கு தானம் வழங்கியவர், அவர் மகன். சென்னா ரெட்டியும், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். காங்., கட்சி தலைவராக இருந்து, ஆந்திராவில் கோலோச்சிய இவருக்கும், அரசியல் உளைச்சல் தான் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தியது.தமிழ்த் திரை உலகில், ரஜினி தொடர்ந்து, 45 ஆண்டுகள் புகழ் பெற்று, உச்சநிலையில் இருக்கிறார். சிறந்த ஆன்மிகவாதி. மேக்கப் இல்லாத உண்மை தோற்றத்தோடு வலம் வருகிறார். கறுப்பு கண்ணாடி, கம்பி மீசை, தலையில் பொய் மயிர் என எதுவும் இல்லாமல் இருக்கிறார். தனக்கிருக்கும் உடல் உபாதை குறித்து, வெளிப்படையாகத் தெரிவித்து விட்டார்.
நேர்மையாளனாக இருப்பது வாழ்க்கையில் கடினம். அப்படி இருக்க ஆசைப்படும் ரஜினி, அரசியலில் நுழைந்தால், தேவையில்லாத மன உளைச்சல்கள் ஏற்படும். பொய்மைவாதிகளுடன் பழக நேரிடும். அவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு, இவரால் ஈடுகொடுக்க முடியாது. அந்த உளைச்சல்களை, இவர் மனம் ஏற்காது; இதனால் உடல் கடுமையாக பாதிப்படையும்.எனவே, அரசியலிலிருந்து விலகி இருப்பதே, ரஜினிக்கு நல்லது. அவரைச் சிறந்த மனிதராக, நல்ல திரைப்பட நடிகராகவே பார்ப்போம். அவர் நீடூடி வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம் அல்லவா! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்... அரசியலுக்கு இழுக்கக் கூடாது. புரிந்ததா!
பேராசியர். மருத்துவர். சு.அர்த்தநாரி., எம்.டி., டி.எம்.,
இருதய நோய் ஊடுருவல் நிபுணர்
கைபேசி: - 9884353288
மின்னஞ்சல் - prabhuraj.arthanaree@gmail.com
வாசகர் கருத்து (23)
இதை சிறு நீரக அறுவை சிகிக்சை செய்து முடித்த அந்த சமயத்திலேயே சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் "இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை" என்ற வெத்து டைலாக் எதுக்கு விட வேண்டும்.ஆக மொத்தம் படத்தில் தான் புலி. நிஜத்தில் புழு . இனியும் அவர் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்தால் அவர்களை கடைந்தெடுத்த பைத்தியங்கள் என்று தான் கூற முடியும்.
இந்த மாத இறுதியில் சிறையிலிருந்து வெளியே வரவிருக்கும் சசிகலா தான், ரஜினிகாந்த் வராத இடத்தை- வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப போகிறார். ரஜினி சொன்ன ஆட்சி மாற்றத்திற்கு பா.ஜ.க. சசிகலாவை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளும். சசிகலா வெளியே வந்ததும் பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள், ஒரு பெரிய பிளவை அவரது ஆதரவாளரான ஓ.பி.எஸ். தலைமையில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. சந்திக்கும்.. ஏற்கனவே சசிகலா ஆதரவாளரான டி.டி.வி. தினகரன் மத்திய பா.ஜ.க. அரசிற்கு ஆதரவு தர தயாராக இருக்கும் நிலையிலும், ரஜினியின் ரசிகர்கள்/ஆதரவாளர்கள் பா.ஜ.கவிற்கு எதிரான நிலை எடுக்க மாடாடார்கள் என பா.ஜ.க. உறுதியாக நம்புவதாலும், பா.ஜ.க. இவர்கள் அனைவரது ஆதரவோடு, இ.பி.எஸ் தலைமையில் உள்ள கட்சியையும் தி.மு.க.வையும் தேர்தலை தைரியமாக எதிர் கொண்டு ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும்.. தேர்தல் முடிவிற்கு பிறகு, மே மாதம் சசிகலா முதல்வராகவும் ஓபிஎஸ் மற்றும் பா.ஜ.க. விலிருந்து ஒருவர் துணை முதல்வராகவும் பதவியேற்கும் ஒரு புதிய கோணத்துடன, ரஜினி எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழும். இது முற்றிலும் சாத்தியமே.
ரஜினியை இப்படி ஆளாளுக்கு உசுப்பேத்தறுத்துக்கு அப்படி இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தார் .இதுவரை அவர் சாதாரண மனிதர்களைப்போல பொய் பேசினார் ..சினிமாவில் அவர் வாங்கிய சம்பளத்தை ஒருமுறையாவது உண்மை சொல்லி தெரிவித்தாரா? அல்லது அதற்குண்டான வருமான வரியை கட்டியிருப்பாரா? எல்லாம் கறுப்புப்பணம் .இவரது படங்களால் இளம் வயதினர் கெட்டதுதான் மிச்சம் ..அவர் ரசிகர்களை உசுப்பேத்தி தன்படங்களை ப்ரோமொடே செய்வதர்காக அந்த ஏழை ரசிகன் தன கையிலுள்ள காசை செலவழித்து கடன்காரனானது தான் மிச்சம் .ரஜினி தன் வாழ்நாளில் ஏதாவது சமுதாய தொண்டு செய்திருக்கிறாரா? அதிரடி அறிவிப்புகளும் சினிமாவில் பன்ச் வசனங்களும் அவரது ஏமாற்று வேலை . கங்கை-காவேரி இணைப்புக்கு அவர் சொல்லியபடி கொடுத்த ஒரு கோடி பணத்தை அரசு செலவு செய்யமுடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. சொன்னசொல்லை காப்பாற்றாதவர்.யாருக்கும் எதையும் செய்யாதவர் ..அவர்குடும்பத்திற்கு எல்லாம் சேர்த்துவைத்தவர் ..அவரதீர்க்கதரிசி என்றால் அவர் உடல்நிலையைப்பற்றி நன்கு அறிந்திருந்தும் முன் யோசனை ஏதும் இல்லாமல், எந்த சிந்தனையும் இல்லாமல் மறுபடியும் பன்ச் வசனம் பேசுவாரா ..அவரை விடுங்கப்பா..அவர்குடும்பத்திற்கு அவர் தேவை...அவர் நீண்ட ஆயிலுடன் தள்ளாத வயதிலும் முகத்தை காட்டி ,இந்த மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்கட்டும் ..
சிறுநீரகம் தொடர்பான மருத்துவரின் தகவல்களுக்கும்,அதனை பிரதிபலித்த தினமலர் ஊடகத்திற்கும் நன்றிகள்.உண்மை தான் கண்டிப்பாக நமது Super Star ரஜினிகாந்த் அவர்கள் நலமோடு வாழ வேண்டும்,தற்போது அரசியல் நோக்கத்தோடும் சிந்தனையோடும் ஓய்வின்றி செயல்பட்டால்,உடல் நிலை பலவீனமடையும் என்பது மருத்துவரின் ஆலோசனை.மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு Super Star ரஜினிகாந்த் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
ரஜினி யாருக்கு வேணுமுன்னு பெயர் வெளியிட்டு விடுங்கள் ..நீங்கள் பாட்டுக்கு நமக்கு வேண்டும் என்று சொன்னால் ஆனதில்லை தமிழக மக்களுக்கும் என்றாகிவிடும் .. பலரில் சிலர் பைத்தியம் ..அவர்களுக்கு பெயர் ரசிகர்கள் .. அவர்களுக்கு உதவ ஊடகங்கள் .. இருந்தாலும் பலரும் இதற்க்கு உடன்படுவத்தில்லை .. சிலர் அதிலும் வெகுசில ரசிகர்கள் மனநல பாதிப்பின் வெளிப்பாடாக இருப்பது உண்மை ..