புதுடில்லி: உ.பி.,யில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்., தலைவர் ராகுலுக்கு நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது பிரச்னை ஏற்படுகிறது.
அமேதியில் ராகுலுக்கு பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இராணி கடும் போட்டியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இதனால் அமேதியில் வெற்றி பெறுவோமா என ராகுலுக்கு லேசாக சஞ்சலம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடலாம் என்கிறார்கள்.
இந்நிலையில் அமேதியிலேயே ராகுலுக்கு ஒரு பழம்பெரும் காங்கிரஸ்காரர் தலைவலியை ஏற்படுத்தி உள்ளார். அவர் தான் சுல்தான் கான் என்ற காங்கிரஸ்காரரின் மகன் ஆரூண் ரஷீத்.
1991 தேர்தலில் ராஜிவுக்காகவும், 1999ல் சோனியாவுக்காகவும் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டவர் சுல்தான் கான். இவர்கள் வீட்டுக்கே ராஜிவ், சோனியா, பிரியங்கா சென்றுள்ளனர். அந்த அளவுக்கு சுல்தானின் குடும்பம் காங்.,கில் ஊறியது.ஆனால் சுல்தானின் மகனே ராகுலை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது உ.பி., அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஷீத் கூறும்போது, ‛‛எங்கள் குடும்பத்தை காங்., ஓரம்கட்டிவிட்டது. நீண்ட காலமாகவே உள்ளூர் கட்சி தலைவர்கள் எங்களை கண்டுகொள்வதில்லை. இதனாலேயே இப்பகுதியின் வளர்ச்சியும் கட்சிப் பணிகளும் முடங்கி உள்ளன. அமேதியில் 6.5 லட்சம் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். இம்முறை நாங்கள் அனைவரும் காங்.,கிற்கு எதிராக வாக்களிப்போம். ராகுல் வெளியூர் வேட்பாளர். என்னைப் போன்ற உள்ளூர்காரர் தான் எம்.பி.,யாக வேண்டும். பா.ஜ.,வும் அமேதியை அலட்சியப்படுத்துகிறது'' என்றார்.
ரஷீத்திற்கு பின்னால் யார்
அமேதியில் ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், பகுஜன் தலைவர் மாயாவதி அறிவித்தது, இக்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. இவர்கள் தான் ரஷீத்தை துாண்டி விட்டிருக்க வேண்டும் என காங்கிரசார் நினைக்கின்றனர்.
2004 முதல் அமேதியில் இருந்து ராகுல் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். 2014 தேர்தலில் ஸ்மிருதி இராணியிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என வெற்றி பெற்றார் ராகுல். அந்த தேர்தலில் ராகுலுக்கு எதிராக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றார் ஸ்மிருதி. ராகுல் பெற்றது 4.07 லடசம் ஓட்டுகள்.
அதாவது 2009 தேர்தலில் 71.78 சதவீத ஓட்டுகளை பெற்ற ராகுல், 2014ல் 46.71 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றார். அப்போது ஸ்மிருதி பெற்றது 34.38 சதவீத ஓட்டு. அமேதி லோக்சபா தொகுதிக்குள் அடங்கிய 5 சட்டசபை தொகுதிகளில் நான்கை பா.ஜ., கைப்பற்றியது. மீதி ஒரு தொகுதியை சமாஜ்வாதி கட்சி பிடித்தது.
அமேதி மக்கள் குற்றச்சாட்டு
அமேதியில் 1980ல் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் வெற்றி பெற்றது முதல் இக்குடும்பத்தின் வசம் தான் தொகுதி இருக்கிறது. 1981 இடைத்தேர்தல், 1984, 1989, 1991 தேர்தல்களில் இங்கு போட்டியிட்டு ராஜிவ் தொடர்ந்து வெற்றி பெற்றார். ராஜிவ் படுகொலைக்கப் பிறகு 1999ல் இங்கு சோனியா வெற்றி பெற்றார்.2004ல் மகன் ராகுலுக்காக அமேதியை விட்டுக்கொடுத்தார் சோனியா. அப்போது முதல் ராகுல் தான் இங்கு ஜெயித்து வருகிறார்.ஆக, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்திரா குடும்பத்தினரிடம் தான் அமேதி தொகுதி இருக்கிறது. ஆனால் தொகுதி வளர்ச்சிக்கு அக்குடும்பம் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.