புல்வாமா தாக்குதல் உலகுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் : மோடி
புதுடில்லி : புல்வாமா தாக்குதல் உலக நாடுகளுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என பிரதமர் மோடி பேசி உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஒத்துழைப்பு அளிக்கும் என சவுதி அரேபிய இளவரசரும் உறுதி அளித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான், டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய மோடி, சவுதி அரேபியா இந்தியாவின் முக்கிய நட்பு நாடு. இந்த உறவு மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியர்கள் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள்.
புல்வாமா தாக்குதல் உலகிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். பயங்கரவாதத்தையும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து பேசிய சவுதி இளவரசர், பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான பிரச்னை. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைக்கும் சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பை தரும். நமது வருங்கால சந்ததியினர் ஒளிமயமாக வாழ யாருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.